லண்டன்: கிராண்ட் ஸ்லாம் போட்டிகளின் ரத்தினமாகத் திகழும் விம்பிள்டன் பொது விருதுப் போட்டிகளை ஒத்திப் போடுவதா அல்லது முற்றிலுமாகக் கைவிடுவதா என்பது அடுத்த வாரத்தில் தெரிந்துவிடும்.
இவ்வாண்டிற்கான விம்பிள்டன் போட்டிகளை ஜூன் 29ஆம் தேதி முதல் ஜூலை 12ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், பிரிட்டனிலும் கொரோனா கிருமி பெரும் உயிர்ச் சேதத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தி வருவதைத் தொடர்ந்து, அனைத்து இங்கிலாந்து மன்றம் அடுத்த வாரம் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
பார்வையாளர்கள் இல்லாமல் மூடிய அரங்கிற்குள் போட்டிகளை நடத்தும் எண்ணமில்லை என்று அம்மன்றம் ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, மே மாதத்தில் நடத்தப்படவிருந்த பிரெஞ்சுப் பொது விருது டென்னிஸ் தொடர் செப்டம்பர் 20ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 4ஆம் தேதி வரை நடத்த முடிவுசெய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அத்துடன், ஏடிபி, டபிள்யூடிஏ டென்னிஸ் தொடர்களும் ஜூன் 7ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
“கொவிட்-19 கிருமித்தொற்றால் எழுந்துள்ள எதிர்பாராத சவால், நாம் சற்றும் நினைத்துப் பார்க்க முடியாதபடி பல வழிகளிலும் நமது வாழ்க்கையைப் பாதித்து வருகிறது. பிரிட்டனிலும் மற்ற நாடுகளிலும் பாதிக்கப்பட்டுள்ளோரை எண்ணிக் கலங்குகிறோம். பொதுமக்களின் சுகாதாரத்திற்கே அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும். அந்த வகையில், விம்பிள்டன் போட்டிகள் தொடர்பாக முடிவெடுப்பதில் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்,” என்று அனைத்து இங்கிலாந்து மன்றத்தின் தலைமை நிர்வாகி ரிச்சர்ட் லூவிஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த விம்பிள்டன் போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவாக் ஜோக்கோவிச்சும் மகளிர் ஒற்றையர் பிரிவில் ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலெப்பும் பட்டத்தைக் கைப்பற்றியது நினைவுகூரத்தக்கது.