ராஞ்சி: சச்சின் டெண்டுல்கர் ரூ.50 லட்சம், சௌரவ் கங்குலி ரூ.50 லட்சம் என இந்திய விளையாட்டுப் பிரபலங்கள் பலரும் கொவிட்-19 தொற்றுக்கெதிரான போருக்காக நன்கொடைகளை வாரி வழங்கி வருகின்றனர்.
இப்படியிருக்க, இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி வெறும் ஒரு லட்ச ரூபாய் மட்டும் நன்கொடை வழங்கி இருப்பதாக ஊடகங்களில் செய்தி பரவியது.
இதையடுத்து, கிரிக்கெட் மூலம் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ள டோனி, இவ்வளவு குறைவாக நன்கொடை அளித்து இருப்பதாகச் சுட்டி, சமூக ஊடகங்கள் மூலமாகப் பலரும் அவரை விமர்சித்தனர்.
இந்நிலையில், “இதுபோன்ற உணர்வுபூர்வமான வேளையில் பொய்ச் செய்திகளைப் பரப்புவதை ஊடகங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். பொறுப்பான பத்திரிகைப் பணி எங்கு மறைந்துபோனது என்பது எனக்கு வியப்பைத் தருகிறது,” என்று தமது டுவிட்டர் பக்கத்தில் காட்டமாகப் பதிவிட்டுள்ளார் டோனியின் மனைவி சாக்ஷி.
‘கெட்டோ’ என்ற நிதிதிரட்டு இணையத்தளம் வழியாக புனே நகரைச் சேர்ந்த ஓர் அறக்கட்டளைக்கு டோனி ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கியிருந்தார் என்பதுதான் உண்மைத் தகவல்.