மும்பை: தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வந்த இந்திய கிரிக்கெட் அணியினர் கொரோனா கிருமி பரவலால் இப்போது வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர்.
இம்மாதத் தொடக்கத்தில்தான் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இந்திய அணி தாய்நாடு திரும்பியது. அதன்பின் தென்னாப்பிரிக்க அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகளில் மோதவிருந்த நிலையில், கிருமித்தொற்று காரணமாக அந்தத் தொடர் ரத்து செய்யப்பட்டது. இன்று தொடங்கவிருந்த ஐபிஎல் டி20 தொடரும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஒத்திப்போடப்பட்டுள்ளது.
இல்லையெனில், ஐபிஎல் தொடருக்காக இந்திய அணி வீரர்கள் தத்தமது குழுக்களுடன் இணைந்து இதுநாள் வரை பயிற்சி மேற்கொண்டு இருந்திருப்பர். எதிர்பாராதவிதமாக, கிருமித்தொற்று எல்லாப் பயிற்சிகளையும் போட்டிகளையும் முடக்கிவிட்டது.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு வேண்டுமெனில் போட்டிகள் ரத்தானதும் தள்ளிப்போடப்பட்டதும் கவலை அளிக்கலாம். ஆனால், கிருமிப் பரவலால் இப்போது கிடைத்துள்ள கட்டாய ஓய்வை வரவேற்றுள்ள இந்திய அணிப் பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி, அது வீரர்களுக்குப் பெரிதும் நன்மை பயக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
"நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் இறுதியில் இந்திய வீரர்கள் களைப்படைந்துவிட்டனர். காயத்தாலும் உடற்தகுதிக் குறைவாலும் அவர்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் இப்போது கிடைத்துள்ள ஓய்வு அவர்களுக்கு நல்லதாகவே அமையும். கடந்த பத்து மாதங்களாக அவர்கள் அதிகமான போட்டிகளில் ஆடிவிட்டனர். அதன் பாதிப்பு அண்மையில்தான் வெளிப்பட்டது.
"கடந்த ஆண்டு மே 23ஆம் தேதி உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக இந்தியாவிலிருந்து கிளம்பினோம். அதன்பின் 10, 11 நாட்கள்தான் வீட்டில் இருந்தோம். பின்னர் வெஸ்ட் இண்டீசுக்குச் சென்றோம். பிறகு இந்தியாவில் இரண்டரை மாதங்கள் விளையாடினோம். அதன் பின்னர் நியூசிலாந்து சென்றோம். மூவகைப் போட்டிகளிலும் ஓயாது விளையாடும் வீரர்களின் நிலையைப் பார்க்கும்போது, தற்போது கிடைத்துள்ள இந்த ஓய்வு வரவேற்கக்கூடியது," என்றார் ரவி சாஸ்திரி.
நியூசிலாந்தில் இருந்து சரியான நேரத்தில் இந்தியா திரும்பிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், தாங்கள் இங்கு வந்த நாளிலிருந்துதான் விமான நிலையங்களில் பயணிகளைப் பரிசோதனை செய்யத் தொடங்கியதாகவும் சொன்னார்.

