ரோம்: கொரோனா கிருமித்தொற்று காரணமாக ஐரோப்பாவில் உள்ள அனைத்து காற்பந்துப் போட்டிகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
பிரபல, இங்கிலிஷ் பிரிமியர் லீக், ஸ்பெயினின் லா லீகா, இத்தாலியின் சிரி ஆ ஆகியவை அவற்றில் அடங்கும்.
இந்நிலையில், இந்தப் பருவத்துக்கான போட்டிகள் நிறைவு பெறாமல்போகக்கூடும் என்று ஐரோப்பிய காற்பந்துச் சம்மேளனத்தின் தலைவர் அலெக்சாண்டர் செவரின் கவலை தெரிவித்துள்ளார்.
வரும் ஜூன் மாதம் இறுதிக்குள் இப்பருவத்துக்கான போட்டிகளைத் தொடர முடியாமல் போனால் போட்டிகள் நிறைவுபெறாமலேயே போய்விடும் அபாயம் இருப்பதாக அவர் கூறினார்.
இருப்பினும், அடுத்த பருவம் தொடங்கும்போது இப்பருவத்தில் விட்ட இடத்திலிருந்தே தொடரும் சாத்தியத்தை அவர் மறுக்கவில்லை.
இப்பருவத்துக்கான காற்பந்துப் போட்டிகளை முடித்துவைக்கும் விதம் தொடர்பில் பல்வேறு தெரிவுகள் இருப்பதாக அவர் இத்தாலிய ஊடகத்திடம் தெரிவித்தார்.
மே மாதம் நடுவில் அல்லது ஜூன் மாதத்தில் அல்லது ஜூன் மாத இறுதியில் போட்டிகளைத் தொடர திட்டம் உள்ளது. ஆனால் இது நிறைவேறாவிடில் போட்டிகள் நிறைவுபெறாமலேயே போகலாம்," என்றார் செவரின்.
"அடுத்த பருவம் தொடங்கும்போது இப்பருவத்தைத் தொடரும் சாத்தியமும் இருக்கிறது. லீக் போட்டிகளுக்கும் காற்பந்துக் குழுக்களுக்கும் சிறந்த தீர்வை நாங்கள் ஆராய்ந்து தேர்ந்தெடுப்போம்." என்றார் செவரின்.
"ரசிகர்கள் இல்லாமல் ஆட்டங்களை நடத்துவது மிகவும் சிரமம். இருப்பினும், ஆட்டங்கள் தொடரும்போது ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்று இன்னும் முடிவெடுக்கப்படவில்லை," என்றார் அவர். அனைத்து கிளப்களின் பிரதிநிதிகளுடன் காணொளி மூலம் பேசுவதாகவும் அவர் தெரிவித்தார்.

