பர்மிங்ஹம்: கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் விதிக்கப்பட்ட வீட்டில் தங்கும் உத்தரவை மீறிய ஆஸ்டன் வில்லா காற்பந்துக் குழுத் தலைவர் ஜேக் கிரிலிஷிற்கு அபராதம் விதிக்கப்படும் என்று அக்குழு தெரிவித்துள்ளது.
பர்மிங்ஹம்மில் உள்ள தன் வசிப்பிடத்தில் இருந்து கிரிலிஷ் வெளியே சென்ற புகைப்படம் வெளியானதையடுத்து வெஸ்ட் மிட்லேண்ட்ஸ் போலிசார் அது தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளதாக பிரிட்டிஷ் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கார்கள் மோதிக்கொண்ட சிறிய விபத்து தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வலம் வந்தன. அந்த இடத்தில் ஆஸ்டன் வில்லா குழுவின் ஜேக் கிரிலிஷ் இருந்த புகைப்படமும் அவற்றுள் ஒன்று.
அரசாங்கத்தின் விதிமுறைகளை மீறியது தொடர்பாக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற ஆஸ்டன் வில்லா குழுவின் அறிக்கை வெளியாவதற்கு சற்று முன்னர், காணொளி வழியாக டுவிட்டரில் தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு கேட்டார் கிரிலிஷ்.
“நடந்த விஷயம் எனக்கு மிகவும் தர்மசங்கடமாக உள்ளது. வெளியே சுற்றி வருமாறு என் நண்பர் விடுத்த அழைப்பை நான் ஏற்றுக்கொண்டது முட்டாள்தனமானது.
“வேறு யாரும் நான் செய்த தவற்றை செய்துவிடவேண்டாம். அனைவரும் வீட்டில் தங்கும் உத்தரவைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்துகிறேன். நான் இனி உத்தரவைச் சரியாக கடைபிடிப்பேன்.
“அனைவரும் என் மன்னிப்பை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்,” எனக் காணொளியில் கூறியிருந்தார்.
கிரிலிஷின் இச்செயல் மிகுந்த ஏமாற்றமளிப்பதாக அறிக்கையில் கூறியுள்ளது ஆஸ்டன் வில்லா.
அவரிடம் இருந்து வசூலிக்கப்படும் அபராதத் தொகை பிர்மிங்ஹம்மிங் அறநிறுவன மருத்துவமனை ஒன்றுக்கு நன்கொடையாக அளிக்கப்படும் என்றும் குழுவின் இணையப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் கொவிட்-19 கிருமித் தொற்று இதுவரை 19,000 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,200 மாண்டனர்.