ஜெனிவா: கிருமித் தொற்று காரணமாக குழுக்களுக்கிடையிலான லீக் காற்பந்துப் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், அது ஐரோப்பாவின் முன்னணி லீக் குழுக்களில் உள்ள வீரர்களின் பரிமாற்ற சந்தை மதிப்பிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சுவிஸ் நாட்டைச் சேர்ந்த அனைத்துலக விளையாட்டு மையத்திற்கான காற்பந்து ஆய்வகத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.
இங்கிலாந்து, ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஐரோப்பாவின் முன்னணி ஐந்து காற்பந்து லீக் குழுக்களைச் சேர்ந்த வீரர்களின் மதிப்பு 28 விழுக்காடு சரிவடையும் என்கிறது அந்த ஆய்வு.
அதாவது இப்பருவத்தில் இனி எந்த ஆட்டமும் விளையாடப்படாமல் போனாலும் ஜூன் மாதத்தில் முடிவடையும் ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படாமல் போகும் நிலையிலும் 32.7 பில்லியன் யூரோவிலிருந்து (S$51.4 பில்லியன்) 23.4 யூரோவாக சரியக்கூடும்.
இதில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான மான்செஸ்டர் சிட்டி மற்ற குழுக்களைக் காட்டிலும் ஆக அதிகமாக 412 மில்லியன் யூரோ (S$ 647 மில்லியன்) இழப்பை எதிர்கொள்ள நேரிடும் என்றும் சொல்கிறது அந்த ஆய்வு.
அதனையடுத்து, ஸ்பானிய காற்பந்துக் குழுவான பார்சிலோனாவிற்கு 366 மில்லியன் இழப்பும் லிவர்பூல் குழுவிற்கு 353 மில்லியன் யூரோவும் இழப்பு ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது.