மான்செஸ்டர்: கொரோனா கிருமித்தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டிகளில் நிச்சயமற்ற நிலை நிலவிவருகிறது.
எனினும், மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி ஒலே குனார் சோல்சியார் தமது வீரர்கள் நல்ல முறையில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனரா என்பதைக் கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது.
தற்போதைய நிலையில் இம்மாத இறுதிவரை இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டிகள் ஒத்திபோடப்பட்டுள்ளன. இதன் தொடர்பில் நாளை காற்பந்து விவகாரங்கள் தொடர்பாக நடைபெறவுள்ள கலந்தாலோசனையில் போட்டிகளை மீண்டும் நடத்துவது மேலும் தள்ளிப்போடப்படலாம் என்று தெரியவருகிறது.
இந்நிலையில், மான்செஸ்டர் யுனைடெட் வீரர்களுக்கு நேரில் சென்று பயிற்சிகளை மேற்கொள்ள முடியாத நிலையில் சோல்சியார் உள்ளதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.
ஆனால், போட்டிகள் மீண்டும் நடைபெறத் தொடங்கும்போது வீரர்கள் நல்ல பயிற்சித் திறனுடன் விளங்குவதை உறுதிசெய்ய அவர் தமது வீரர்களுடன் கைபேசி மூலம் தொடர்புகொண்டு அவர்கள் முறையாக பயிற்சி மேற்கொண்டு வருவதை கண்காணித்து வருவதாகவும் செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“முன்னர் நான் அவர்களை தினமும் நேருக்கு நேர் சந்தித்து பயிற்சியில் ஈடுபடுத்துவேன். அந்த வகையில் தற்போதைய நிலைமை வித்தியாசமானதே.
“இப்பொழுது நான் அவர்களுடன் வாட்ஸ்அப் குழு மூலம் தகவல்களைப் பரிமாறிக்கொள்வது, மின்னஞ்சல் அனுப்புவது ேபான்றவற்றால் அவர்களுடன் ெதாடர்பில் இருக்கிறேன். இதில் எப்பொழுது மீண்டும் கூடி பயிற்சியில் ஈடுபடுவது, எந்த மாதிரியான பயிற்சியில் ஈடுபடுவது என்பது குறித்து பேசுவோம்.
“ஆனால், இனி நிைலமை எப்படி இருக்கும், எப்பொழுது மீண்டும் போட்டிகள் தொடங்கும் என்பதை உறுதியாக் கூறமுடியாத நிலையில் இருக்கிறோம். தொழில்நுட்பம் இந்த அளவுக்கு வளர்ந்துள்ளது நமக்கு ஓர் அதிர்ஷ்டமே.
“நாம் ஒருவருடன் ஒருவர் தொடர்பில் இருக்கலாம். தகவல்கள் அனுப்பி உடனுக்கு உடன் அவற்றுக்கான பதில்களைப் பெறலாம். சில சமயங்களில் பழைய முறைப்படி தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம்,” என்று மான்செஸ்டர் யுனைடெட் இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.