கொரோனா கிருமித்தொற்று சிங்கப்பூர் உட்பட உலகளவில் விளையாட்டுத் துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வேளையில், சிங்கப்பூர் பிரிமியர் காற்பந்து லீக்கில் விளையாடும் வீரர்களின் சம்பளம் குறைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
சிங்கப்பூரில் கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கம் கடந்த வாரம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதைத் தொடர்ந்து சிங்கப்பூர் பிரிமியர் லீக் குழுக்களின் வருமானம் கணிசமாக குறைந்துள்ளது. இதனால் வீரர்களின் சம்பளத்தைக் குறைப்பது குறித்து பெரும்பாலான குழுக்கள் பரிசீலித்து வருவதாக இந்த விவகாரம் குறித்து நன்கு அறிந்த வட்டாரங்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறியதாக செய்தி வெளியிடப்பட்டது.
குழுத் தலைவர்களுக்கு இடையே கடந்த திங்கட்கிழமை நடந்த சந்திப்பின்போது இந்த விவகாரம் குறித்து பேசப்பட்டதாக அறியப்படுகிறது. இது குறித்து இன்னும் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. சம்பளத்தைக் குறைக்கும் திட்டம் குறித்து பெரும்பாலான குழுக்கள் வீரர்களுடன் கலந்தாலோசிக்கவில்லை என அறியப்படுகிறது. சிங்கப்பூர் பிரிமியர் லீக்கில் விளையாடும் ஒவ்வொரு குழுவுக்கும் சராசரி வருடாந்திர வரவுசெலவு $1 மில்லியனுக்கும் $1.5 மில்லியனுக்கும் இடைப்பட்டிருக்கும். குழுவின் அனைத்து வீரர்களுக்கும் ஒதுக்கப்படும் மாதச் சம்பளம் $75,000க்கும் $100,000க்கும் இடைப்பட்டிருக்கும்.
ஒன்பது குழுக்களைக் கொண்ட லீக் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமையிலிருந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா கிருமித்தொற்றால் உலகளவில் பிரதான காற்பந்து லீக் போட்டிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. ஸ்பானிய காற்பந்து லீக் முதல் இங்கிலிஷ் பிரிமியர் லீக் வரை வருமான இழப்பால் காற்பந்து வீரர்கள் பலரின் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது அல்லது குறைக்கப்படவிருக்கிறது.
இத்தகைய பிரசித்திபெற்ற லீக் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்குப் பெரிய சம்பளம் வழங்கப்படுவதால் தற்போதைய நிலவரத்தைக் கருதி அவர்களது சம்பளம் குறைக்கப்பட்டாலும் அவர்களுக்குக் குறிப்பிடும்படியான பாதிப்பு ஏற்படாது. ஆனால், சிங்கப்பூர் பிரிமியர் லீக்கில் பெரும்பாலான சிங்கப்பூர் வீரர்கள் மாதச் சம்பளமாக $5,000 முதல் $10,000 வரை ஈட்டுகின்றனர். 23 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கு அதைவிட சம்பளம் குறைவு.
சம்பளக் குறைப்பு குறித்து கருத்துரைத்துள்ள பெயர் குறிப்பிட விரும்பாத வீரர் ஒருவர், “வீரர்களுக்கு உதவுவது குறித்து காற்பந்துக் குழுக்கள் அடிக்கடி பேசுவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், நெருக்கடி என வரும்போது, சம்பளத்தைக் குறைப்பது பற்றியே அவர்கள் முதலில் யோசிக்கின்றனர்,” என்றார்.