டூரின்: உலக நாடுகளில் கொரோனா கிருமித்தொற்று மிக வேகமாகப் பரவி வரும் நிலையில் இத்தாலி காற்பந்து லீக் போட்டியின் ஜாம்பவான்களில் ஒன்றான யுவெண்டஸ் குழுவின் மூன்று வீரர்களும் பாதிக்கப்பட்டனர்.
அவர்களில் நட்சத்திர வீரர் பாவ்லோ டைபாலாவும் ஒருவர். இந்நிலையில், தமக்கு ஏற்பட்ட மிகக் கசப்பான அனுபவத்தைப் பற்றி அவர் பகிர்ந்துகொண்டார்.
அதுமட்டுமல்லாது, கொரோனா கிருமித்தொற்று மிகவும் ஆபத்தானது என்றும் அந்நோயால் பாதிக்கப்படாமல் இருக்க வீட்டிலேயே இருக்கும்படி அனைவரையும் அவர் கேட்டுக்கொண்டார்.
கொரோனா கிருமித்தொற்று காரணமாக இத்தாலியில் ஆக அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. டைபாலாவுக்கும் அவரது காதலிக்கும் கிருமித்தொற்று ஏற்பட்டது கடந்த மாதம் உறுதியானது. இதையடுத்து இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது அவர்கள் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“வீட்டிற்குள்ளேயே இருங்கள். இதுவே கொரோனாவைக் கட்டுப்படுத்த தற்போது எல்லா நாடுகளும் கடைப்பிடிக்க வேண்டிய ஒரே ஆயுதமாக உள்ளது. கொரோனா விஷயத்தில் கவனமாக இருங்கள்,” என டைபாலா தெரிவித்துள்ளார். ‘ஒவ்வொரு நாட்களும் ஏராளமான மக்கள் மரணம் அடைகின்றனர். நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது. இத்தாலியில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாலும் உள்ளூர் மருத்துவர்களால் சமாளிக்க முடிவில்லை என்பதாலும் ஏராளமான நாடுகள் மருத்துவர்களை அனுப்பி வைத்துள்ளன.
“கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவேன் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. வீட்டுக்குள்ளேயே தங்கியிருங்கள் என்ற அறிவுரை விளையாட்டல்ல. இதைப் பின்பற்றி மிகவும் கவனமாக இருங்கள்.
“எனக்கு மோசமான இருமல் இருந்தது. தூங்கும்போது மிகவும் சோர்வாக இருந்தேன். குளிராக இருப்பது போன்று உணர்ந்தேன். முதலில் இது என்னவாக இருக்கும் என்பது குறித்து நினைக்கவில்லை. ஆனால், முதலில் எனது சக வீரர்கள் இருவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட பிறகு, எனக்கும் அது தொற்றிக் கொண்டது உறுதியானது.
“எங்களுக்கு தலைவலி இருந்தது. ஆனால், எந்த மருந்தையும் நாங்கள் உட்கொள்ளவில்லை. யுவெண்டஸ் கிளப் எங்களுக்கு வைட்டமின் மாத்திரைகளைக் கொடுத்தது. அதன்பின் நாங்கள் குணமடைந்து வந்ததை உணர்ந்தோம். இது மனநிலையைப் பொறுத்தது. முதலில் பயமாக இருந்தது. தற்போது சரியாகிவிட்டது. தற்போது எங்களுக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லை. நான் வேகமாக சோர்வடைந்தேன். பயிற்சி எடுக்க விரும்பினேன். ஆனால், ஐந்து நிமிடத்திற்குப் பிறகு மூச்சு விட திணறினேன். அப்போதுதான் எங்களுக்கு ஏதோ ஒன்று சரியில்லை என்பது தெரியவந்தது. அதன்பின் பரிசோதனையில் கிருமித்தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது’’ என்றார் டைபாலா.