இஸ்லாமாபாத்: இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் கொரோனா கிருமி தன் கோரப் பிடியை இறுக்கத் தொடங்கியுள்ளது. இப்படியொரு சூழலில், பரம எதிரிகளான இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டியை நடத்தி கிருமித்தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு நிதி திரட்டலாம் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் (படம்) யோசனை தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியில் மட்டும் காணும் வகையில் போட்டிகளை நடத்தவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2007ஆம் ஆண்டிற்குப் பின் இரு அணிகளும் இருதரப்புத் தொடரில் மோதியதில்லை. அனைத்துலக கிரிக்கெட் மன்றப் போட்டிகளிலும் ஆசியக் கிண்ணப் போட்டிகளிலும் மட்டுமே அவை ஒன்றையொன்று எதிர்த்தாடி வருகின்றன.
“இந்த நெருக்கடியான சூழலில், இரு நாட்டு அணிகளும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட வேண்டும். போட்டிகளின் முடிவு குறித்து இரு நாட்டு மக்களும் கவலைப்பட மாட்டார்கள். விராத் கோஹ்லி சதமடித்தால் நாங்களும் மகிழ்வோம். அதேபோல, பாபர் ஆஸம் சதம் விளாசினால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். முடிவு என்னவாக இருந்தாலும் இரு அணிகளுமே வெற்றியாளர்கள்தான்” என்று அக்தர் கூறியுள்ளார்.