பெர்ன்: கொரோனா கிருமித்தொற்றின் தாக்கம் முழுமையாக குறைவதற்கு முன்பே அவசரப்பட்டு காற்பந்து லீக் போட்டிகளைத் தொடங்கிவிட வேண்டாம் என்று அனைத்துலகக் காற்பந்து சம்மேளனத் (ஃபிஃபா) தலைவர் கியானி இன்ஃபேன்டினோ வேண்டுகோள் விடுத்துள்ளார். அவ்வாறு செய்தால் அது ஆபத்தாகிவிடும் என அவர் எச்சரித்துள்ளார்.
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா கிருமியின் கோரத்தாண்டவம் விளையாட்டுத் துறையையே புரட்டி போட்டுவிட்டது. இரண்டு, மூன்று மாதங்களுக்கு எந்தப் போட்டிகளும் நடைபெறாத நிலை ஏற்பட்டு உள்ளது.
பிரிட்டன், ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்படும் பிரசித்திபெற்ற காற்பந்து லீக் போட்டிகளின் மூலம் பெரிய அளவிலான பணம் புரளும்.
கொரோனா கிருமி பரவும் அச்சத்தால் இப்போட்டிகள் அனைத்தும் பாதியில் நிற்கின்றன. இதனால் சம்பந்தப்பட்ட நாட்டு காற்பந்துச் சம்மேளனங்கள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. உலகக் கிண்ணக் காற்பந்து தகுதிச் சுற்று போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
பல நாடுகளில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் வேளையில், போட்டியை எப்போது தொடங்கும் என்று காற்பந்துச் சம்மேளனங்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றன. ஸ்பானிய லீக், ஜெர்மானிய லீக் போட்டிகளை அடுத்த மாத இறுதியில் தொடங்குவது குறித்து அந்தந்த நாட்டு காற்பந்துச் சம்மேளனங்கள் யோசித்து வருகின்றன.
ஆனால், அவ்வாறு அவசரப்படுவது ஆபத்தில் முடிந்துவிடும் என்று இன்ஃபேன்டினோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“காற்பந்துப் போட்டிகளில் உடல் ஆரோக்கியம், பாதுகாப்பு ஆகியவற்றுக்குத்தான் முதலில் முக்கியத்துவம் அளிக்கப்படும். மனித உயிரைவிட விளையாட்டு பெரிதல்ல. காற்பந்துப் போட்டிகளை நடத்துபவர்கள் இதைப் பின்பற்றும்படி அறிவுறுத்துகிறோம்.
“இதை நான் எவ்வளவு வலியுறுத்திச் சொன்னாலும் போதாது. எந்தவொரு லீக் போட்டிகளுக்காக மனித உயிரை ஆபத்தில் சிக்க வைப்பது சரியானது அல்ல. உலகம் முழுவதும் ஒவ்வொருவரின் மனதிலும் இந்த விஷயம் தெளிவாக பதிய வேண்டும்,” என்று நேற்று முன்தினம் இன்ஃபேன்டினோ வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறினார்.
“நிலைமை 100 விழுக்காடு பாதுகாப்பாக இல்லாத பட்சத்தில் போட்டிகளைத் தொடங்கினால் அது மிகவும் பொறுப்பற்ற செயலாகி விடும். இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். ஆபத்தைத் தேடிப் போவதைவிட காத்திருப்பதே நல்லது,” என்றார் அவர்.