லண்டன்: அனைத்து காற்பந்து வீரர்களும் கொரோனா கிருமித்தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே இங்கிலிஷ் காற்பந்துப் பருவத்தைத் தொடங்க முடியும் என லீக் நிர்வாகிகள் சங்கத்தின் தலைமை நிர்வாகி ரிச்சர்ட் பீவன் கூறியுள்ளார்.
“தேசிய சுகாதாரச் சேவை ஊழியர்கள் மற்றும் நோயாளிகள்தான் முதலில் கொரோனா கிருமித்தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.
“அதன் பின்னரே, விளையாட்டுத் துறையில் ஈடுபடுவோருக்குப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும்,” என்று பிபிசி செய்தி நிறுவனத்திடம் பீவன் கூறினார்.
கொரோனா கிருமித்தொற்றால் பிரிட்டனில் காற்பந்து ஆட்டங்கள் நிறுத்திவைக்கப்பட்டு ஒரு மாதகாலமாகிவிட்டது. கிருமித்தொற்றுக்கு அந்நாட்டில் கிட்டத்தட்ட 9,000 பேர் உயிரிழந்துவிட்டனர்.
கொரோனா கிருமித்தொற்று அலை ஓய்ந்த பிறகு இரண்டு மாதங்களுக்குள் நடப்பு காற்பந்துப் பருவத்தில் எஞ்சிய பகுதியை முடித்துவிடலாம் எனக் காற்பந்து லீக் தலைவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
“இம்மாத இறுதியில்தான் நிலவரம் எப்படி மாறுகிறது என்பதை அறிய முடியும். அதுவரை, எஞ்சிய காற்பந்துப் பருவம் எப்போது தொடங்கும் என்பது குறித்து எங்களால் கணிக்க முடியாது,” என்று பீவன் கூறினார்.
ஜெர்மனியில் காற்பந்துப் பருவத்தை அடுத்த மாதம் தொடங்குவது குறித்து காற்பந்து அதிகாரிகள் கலந்தாலோசிப்பதை பீவன் சுட்டினார்.
“ஜெர்மனியில் நாள் ஒன்றுக்கு 50,000 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. ஆனால் நமது நாட்டில் (பிரிட்டனில்) நாள் ஒன்றுக்கு 10,000 பேர் மட்டுமே பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்,” என்று கூறிய அவர், இம்மாத இறுதிக்குள் அந்த எண்ணிக்கையை 100,000ஆக உயர்த்த அரசாங்கம் இலக்கு கொண்டிருப்பதைச் சுட்டினார்.
காற்பந்து வீரர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் வரை தாங்கள் திடலுக்கு வர நிர்வாகிகள் விரும்பவில்லை என்று பீவன் சொன்னார்.
இந்நிலையில், இங்கிலிஷ் பிரிமியர் லீக் போட்டிற்கு அடுத்த நிலையில் உள்ள சாம்பியன்ஷிப் மற்றும் மூன்றாவது, நான்காவது நிலை லீக் போட்டிகளில் விளையாடும் குழுக்களுக்கு காற்பந்து லீக் கடந்த வாரம் கடிதம் ஒன்றை அனுப்பியது.
கொரோனா கிருமி பரவுவது ஒருபுறமிருக்க, காற்பந்து லீக் போட்டிகளின் எஞ்சிய பருவத்தை முடித்துவிடுவதில் தமக்கு நம்பிக்கை இருப்பதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், இது குறித்து குழுக்களின் நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து பிறகே முடிவெடுக்க வேண்டும் என பீவன் கூறினார்.
“நிர்வாகிகள், பயிற்றுவிப்பாளர்களுடன் கலந்தாலோசித்த பிறகே முடிவெடுக்கப்பட வேண்டும். அவர்களின் கருத்தைக் கேட்டறியாமல் ஒன்றும் செய்ய முடியாது,” என்றார் அவர்.