சென்னை: ஐந்து வயது சிறுவனான ரேஷி தேவ் குறி வைத்தால் அம்புகள் தப்பாமல் பாயும்.
மூன்றரை மணி நேரத்தில் 2,222 அம்புகளை இலக்கு தவறாமல் செலுத்தி அவன் சாதனைப் படைத்துள்ளான். ரேஷியின் சாதனை ஆசிய சாதனைப் புத்தகத்திலும் இந்திய சாதனைப்புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது. சுதந்திர நாளன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரேஷி அம்புகளை விடாமல் பாய்ச்சி ஆசிய சாதனைப் புத்தகத்தின் நிர்வாகியான விவேக் ஆர் நாயர் உள்ளிட்ட நடுவர்களை அசத்தினான்.
ரேஷிக்கு அம்பு மீதுள்ள மோகத்தைப் பற்றி பேசிய அவனுடைய தந்தை ஜெயகுமார், “மூன்று வயதிலிருந்து அவனுக்கு அம்பு எய்துவது பிடிக்கும்,” என்று கூறு கின்றார்.
“ஆரம்பத்தில் அவனை காற் பந்து விளையாட்டுப் பயிற்சிக்கு அனுப்பினோம். அங்கு சிலர் அம்பு எய்தும் பயிற்சியில் ஈடுபட்டதைப் பார்த்து அவனுக்கும் அதில் ஆர்வம் ஏற்பட்டது. தமிழகத்தில் மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் அவனுக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது,” என்று அவர் ேமலும் கூறியதாக ‘டெக்கான் குரோனிக்கல்’ தெரிவித்தது. ரேஷிக்கு பயிற்சி அளித்தவர் மணிவாசகம். இவர், சென்னையில் புகழ்பெற்ற ‘வில்-ஆர்ச்சரி’ பயிற்சிக் குழுவை நடத்தி வருகிறார்.
“ரேஷியின் ஆற்றலும் வேகமும் என்னை வியக்க வைத்துள்ளன. உலக சாதனைக்கும் அவன் முயற்சி செய்யலாம்,” என்று மணிவாசகம் கூறினார்.
“ஆசிய மற்றும் இந்திய சாதனைப் புத்தகத்தில் ஆறு மணி நேரத்தில் 1,800 அம்புகள் செலுத்திய சாதனை இடம்பெற்றிருந்து. இதைப் பார்த்ததும் மார்ச் 2020லிருந்து தினமும் ஆறு முதல் ஏழு மணி நேரம் வரை ரேஷியின் வீட்டில் அவனுக்குப் பயிற்சி அளித்தேன். அதற்கு நல்ல பலன் கிட்டியது,” என்று அவர் தெரிவித்தார்.
கொவிட்-19 முடக்கத்தால் ரேஷியின் கனவுக்குத் தடை ஏற்படவில்லை. அதையும் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட முதல் வகுப்பு மாண வனான ரேஷி, புதிய சாதனையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறான்.