உள்ளூர் நீச்சல் வீரர் ஜோசப் ஸ்கூலிங் பயிற்சிக்காக மீண்டும் அமெரிக்கா திரும்பவிருக்கிறார்.
அவர் இவ்வாண்டு பிப்ரவரியில் அவரது முன்னாள் பயிற்றுவிப்பாளர் செர்ஜியோ லோபெஸ்ஸுடன் பயிற்சி பெற அமெரிக்காவின் வெர்ஜினியா மாநிலத்திற்குச் சென்றிருந்தார்.
எனினும், கொவிட்-19 தொற்று உலகெங்கும் பரவத் தொடங்கியதால் 25 வயது ஸ்கூலிங் மார்ச் மாதம் சிங்கப்பூர் திரும்பினார். அவர் தேசிய பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று வருகிறார். தமது முன்னாள் பயிற்றுவிப்பாளருடன் அமெரிக்காவில் மீண்டும் இணைய அமெரிக்க விசாவிற்கு விண்ணப்பம் செய்யவிருக்கிறார்.
லோபெஸ் ஸ்கூலிங்குடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார்.
’நான் ஒவ்வொரு நாளும் அவருடன் பேசுகிறேன். பயிற்சி செய்யும்போது எல்லாம் எனக்கு குறுஞ்செய்தி அனுப்புவார். தேசிய பயிற்சி நிலையத்தில் உள்ள பயிற்றுவிப்பாளர்களும் என் முன்னேற்றம் குறித்து செர்ஜியோவுக்குத் தகவல் கொடுத்த வண்ணம் உள்ளார்கள்,’ என்று தி ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறினார் ஸ்கூலிங்.
அமெரிக்கா திரும்பியவுடன் உடனே முழுப் பயிற்சியில் தன்னால் ஈடுபட முடியும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார் ஸ்கூலிங்க.
எனினும் அவர் அமெரிக்க செல்வதற்கு கொவிட்-19 சூழல் அணுக்கமாகக் கவனிக்கப்பட்டு வருகிறது. அந்நிலையைப் பொறுத்துதான் எல்லாம் உள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டதற்குப் பிறகு வேறு எந்த போட்டியிலும் கலந்துகொள்ளவில்லை.
ஆனால் தாம் பயிற்சி மேற்கொண்டு பந்தயங்களில் கலந்து கொள்வது ஒரு பக்கம் இருக்க தாம் விரும்பும் உடல், மன
நிலையை அடைவதே இலக்கு என்று விவரித்தார் ஸ்கூலிங்.
நீச்சலில் தமது சாதனையை மீண்டும் எட்டவோ முறியடிக்கவோ இல்லை. கடந்த 2016ஆம் ஆண்டு பிரேசிலின் ரியோ நகரில் நடந்த ஒலிம்பிக் நீச்சல் போட்டியில், 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி பந்தயத்தில் தங்கம் வென்றார். அதுவே ஒலிம்பிக்கில் சிங்கப்பூர் பெற்ற முதலும் ஒரே தங்கப்
பதக்கமும் ஆகும்.
ஆனால் அதில் அவர் போட்டியை முடித்த 50.39 வினாடிகள் சாதனை நேரத்தை ஸ்கூலிங் மீண்டும் எட்டவில்லை.