நடிகர் அருண் விஜய் அண்மையில் தன்னுடைய 43வது பிறந்த நாளை ஆதரவற்றோருடன் கொண்டாடினார். திரையுலகப் பிரபலங்களும் அவரது
ரசிகர்களும் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
அருண் விஜய் 1995ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘முறை மாப்பிள்ளை’ என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து பல அடிகள் சினிமாவில் வங்கியபோதும் அருண் விஜய் தனது விடாமுயற்சியைக் கைவிடவில்லை.
‘பிரியம்’, ‘கங்கா கௌரி’, ‘இயற்கை’, ‘பாண்டவர் பூமி’ என்று பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியபோதும் அவரால் திரையுலகில் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை.
2015ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் திரையுலகில் அருண் விஜய்க்கு தங்க கதவு திறந்தது.
அந்தப் படத்திலிருந்து அவருடைய திரை வாழ்க்கை சூடுபிடிக்க ஆரம்பித்தது. பின்னர் ‘குற்றம் 23’, ‘தடம்’, ‘மாஃபியா’, ‘செக்கச் சிவந்த வானம்’ உள்ளிட்ட படங்கள் மூலம் தனது மார்க்கெட்டை உயர்த்தினார் அருண் விஜய்.
தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடிக்க அயராது உழைத்து வருகிறார்.
பொதுவாக அருண் விஜய் தினமும் புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம். உடற்பயிற்சி செய்வது, தனது செல்லப் பிராணிகளுடன் விளையாடுவது உள்ளிட்ட புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்வார்.
தற்போது தனது பிறந்தநாளை ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு, “இவர்களின் புன்னகையைப் பார்ப்பது மற்றும் இவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதே எனது பிறந்தநாளுக்கு நான் விரும்பும் சிறந்த தொடக்கமாகும்.
“இது என் இதயத்தை முழுமையாக்குகிறது. உங்கள் அருமையான வாழ்த்துகள் மற்றும் ஆசீர்வாதங்களுக்கு அனைவருக்கும் நன்றி,” என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் ‘சினம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். முன்பு இவர் நடித்திருந்த ‘குற்றும் 23’ படத்திற்குப் பிறகு மீண்டும் காவல் அதிகாரியாக இந்தப் படத்தில் நடித்து வருகிறார்.
பல்லக் லால்வானி கதாநாயகியாக நடிக்கிறார். அருண் விஜய்யின் தந்தையும் நடிகருமான விஜயகுமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஷபீர் இசையமைக்கிறார்.
அருண் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ‘சினம்’ படக்குழுவினர் சுவரொட்டி ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தனர். அந்த சுவரொட்டியை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து அருண் விஜய் ‘மூடர் கூடம்’ நவீன் இயக்கத்தில் ‘அக்னிச் சிறகுகள்’ என்ற படத்திலும் ‘பாக்ஸர்’ என்ற படத்தில் ரித்திகா சிங்குடன் நடித்து வருகிறார். இயக்குநர் மிஷ்கின் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார்.
இவரின் தங்கையின் கணவர் இயக்குநர் ஹரி, சூர்யாவை வைத்து ‘அருவா’ படத்தை எடுக்க இருக்கிறார். அதன் பிறகு ஹரியின் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இவர் 2006ஆம் ஆண்டு பிரபல திரைப்பட தயாரிப்பாளரின் மகளான ஆரத்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு பூர்வி என்ற மகளும் அர்னவ் என்ற மகனும் இருக்கின்றனர்.