பஹ்ரேன் ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் ‘ஹாஸ்’ குழுவின் ரோமான் குரோஸ்ஜான், 34, ஓட்டிச் சென்ற கார், தடுப்புகளின் மீது மோதி இரண்டாக உடைந்து, அதில் ஒரு பகுதி தீக்கிரையானது.
பந்தயத்தின் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்த பயங்கர விபத்து நிகழ்ந்தது. பிரெஞ்சு வீரரான குரோஸ்ஜான் 32 நொடிகள் தீயின் பிடியில் சிக்கி இருந்ததாகக் கூறப்பட்டது. இவரது கைகளிலும் கணுக்கால்களிலும் இலேசான தீக்காயம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், இரு கைகளிலும் கட்டுகளுடன் மருத்துவமனையில் இருந்தபடி இன்று காணொளி வழியாகப் பேசிய குரோஸ்ஜான், “நான் நலமாக இருக்கிறேன். அனைவரின் வேண்டுதல்களுக்கும் நன்றி,” என்று தெரிவித்துள்ளார்.
இவரது கைகளில் எலும்புமுறிவு எதுவும் ஏற்படவில்லை என்பதைப் பரிசோதனைகள் உறுதிசெய்தன.
இதனிடையே, “குரோஸ்ஜான் இன்னும் உயிரோடு இருப்பது அதிசயம் தான்,” எனக் குறிப்பிட்டார் 1996 உலக வெற்றியாளரான பிரிட்டனின் டேமன் ஹில். அதே வேளையில், இந்நிகழ்வை திரும்ப திரும்ப மறுஒளிபரப்பு செய்யப்படுவது அருவருப்பையும் ஏமாற்றத்தையும் அளிப்பதாக சக எஃப்1 வீரர் டேனியல் ரிக்கார்டோ கூறியுள்ளார்.
போட்டியின் வெற்றியாளரான லூவிஸ் ஹேமில்டன், குரோஸ்ஜான் பாதுகாப்பாக இருப்பதற்குத் தாம் மிகவும் நன்றிக்கடன்பட்டு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.