இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டில் 14வது ஐபிஎல் போட்டியில் பங்கேற்று ஆடவிருக்கும் விளையாட்டாளர்களுக்கான ‘மினி’ ஏலம் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது.
ஏலத்திற்கான பட்டியலில் 164 இந்தியர்கள் உள்பட 292 வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். ஏல இறுதியில் 22 வெளிநாட்டவர் உள்ளிட்ட 57 வீரர்கள் விலை போனார்கள். 8 ஐபிஎல் அணிகளும் இவர்களை ரூ.143 கோடியே 69 லட்சத்துக்கு வாங்கின.
தென்ஆப்பிரிக்க ‘ஆல்ரவுண்டர்’ கிறிஸ் மோரிஸ் அதிகத் தொகைக்கு ஏலம் போனார். அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.16.25 கோடிக்கு எடுத்தது. இதற்கு முன்பு யுவராஜ் சிங் ரூ. 16 கோடிக்கு ஏலம் போனதே சாதனையாக இருந்தது. அதை கிறிஸ் மோரிஸ் முறியடித்தார். அவருக்கான அடிப்படை விலை ரூ.75 லட்சம் ஆகும்.
இவருக்கு அடுத்தபடியாக நியூசிலாந்து வீரர் கைல் ஜேமிசனை ரூ.15 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வாங்கியது. ஆஸ்திரேலிய அதிரடி பந்தடிப்பாளர் மேக்ஸ்வெல் ஏலத்தில் 3வது இடத்தைப் பிடித்தார். அவரை பெங்களூரு அணி ரூ.14.25 கோடிக்கு எடுத்தது.
கிருஷ்ணப்பா கௌதம் இந்த ஏலத்தில் புதிய சாதனை படைத்தார். அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை ரூ. 20 லட்சம் என்றபோதி லும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.9.25 கோடிக்கு அவரை எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அனைத்துலகப் போட்டியில் விளையாடாத வீரர்களில் அதிகத் தொகைக்கு ஏலம் போனவர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
2018 ஏலத்தில் குருணால் பாண்டியா ரூ. 8 கோடியே 80 லட்சத்துக்கு ஏலம் போனதே அதிகபட்சமாக இருந்தது. அதன் பிறகு அவர் அனைத்துலகப் போட்டிகளில் விளையாடினார்.
தமிழக வீரர்களில் ஷாருக்கான் அதிகத் தொகைக்கு ஏலம் போனார். அவரை பஞ்சாப் அணி ரூ.5.25 கோடிக்கு எடுத்தது. இதர தமிழக வீரர்கள் ஹரி நிஷாந்த்தை சென்னை அணியும் சித்தார்த்தை டெல்லி அணியும் தலா ரூ.20 லட்சத்துக்கு எடுத்தன.
கடைசி வீரராக சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் (படம்) ஏலம் விடப்பட்டார். அவரை அடிப்படை விலையான ரூ.20 லட்சத்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. அத்துடன் ஏலம் முடிவடைந்தது.
சச்சின் மகன் என்பதற்காக ஐபிஎல் போட்டிக்கு அர்ஜுன் ஏலம் எடுக்கப்பட்டுள்ளாரா என்று கேள்வி எழுந்தது. அதற்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் மகேலா ஜெயவர்த்தன பதில் அளிக்கையில், “முழுக்க முழுக்க திறமையின் அடிப்படையிலேயே அவர் வாங்கப்பட்டுள்ளார்.
“அர்ஜுன் அணியில் இணைவது அணிக்கு நல்லது. துடிப்பான இளைஞர் அவர். மும்பை அணிக்கு ஆடினார். தற்போது மும்பை இந்தி யன்ஸுக்கு தேர்வு ஆகியுள்ளார்,” என்றார் அவர்.
கிரிக்கெட் உலகில் கொடி கட்டிப் பறந்த சச்சின் டெண்டுல்கர் 2013ஆம் ஆண்டு அனைத்துலகப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அந்தப் போட்டிகளில் நூறு சதங்களை அடித்த சாதனை யாளர் அவர்.