இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையே மகளிர் கிரிக்கெட் ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவும் இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்றது. இந்நிலையில், நேற்று மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய மகளிர் அணி முதலில் பந்தடித்தது.
இந்தப்போட்டியின் மூலம் இந்திய மகளிர் அணித் தலைவர் மித்தாலி ராஜ் 10,000 ஓட்டங்களைக் கடந்தார். அத்துடன் 10,000 ஓட்டங்கள் எடுத்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.
அனைத்துலக அளவில் 10,273 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து வீராங்கனை சார்லட் எட்வர்ட் முதலிடத்தில் இருக்கிறார். இவரை அடுத்து மித்தாலி ராஜ் இப்போது இரண்டாம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
இந்தப் போட்டியில் 36 ஓட்டங்கள் எடுத்து மித்தாலி ராஜ் ஆட்டமிழந்தாலும், அவர் 10,000 ஓட்டங்கள் எடுத்த சாதனை புரிந்ததைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
அனைத்துலக ஒருநாள் போட்டிகளில் மித்தாலி ராஜ் இதுவரை 75 அரை சதமும் 8 சதமும் விளாசியுள்ளார்.