மும்பை: சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியிடம் சென்னை அணி தோல்வி அடைந்தது.
2021 ஐபிஎல் பருவத்தின் இரண்டாவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடின. மும்பை வான்கடே திடலில் நடைபெற்ற இந்த போட்டியில் பூவா தலையாவில் வென்ற டெல்லி அணியின் தலைவர் ரிஷப் பந்த் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
அதனால் டோனி தலைமையிலான சென்னை அணி முதலில் பந்தடித்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ஓட்டங்களைக் குவித்தது. சென்னை அணிக்காக தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ருதுராஜ் கெய்க்வாட்டும் டுபிளேஸிஸும் களம் இறங்கினர். சென்னை அணி 7 ஓட்டங்கள் எடுத்த நிலையில் இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியூட்டினர்.
இருப்பினும் மொயின் மற்றும் சுரேஷ் ரெய்னா மூன்றாவது விக்கெட்டிற்கு 53 ஓட்டங்களைச் சேர்த்தனர். இருவரும் ஓட்டங்களைக் குவித்து அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மொயின் அலி 36 ஓட்டங்களிலும் ராயுடு 23 ஓட்டங்களிலும் ஆட்டம் இழந்தனர். ரெய்னா 54 ஒட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். டோனி ஓட்டம் எதுவும் எடுக்காமலேயே ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.
சாம் கரண் மற்றும் ஜடேஜா இருவரும் 51 ஓட்டங்களைக் குவித்தனர். முடிவில் சென்னை அணி 188 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அந்த இலக்கை விரட்டிய டெல்லிக்கு பிருத்வி ஷா மற்றும் தவான் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் 138 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பிருத்வி ஷா 72 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ரிஷப் பந்த் களத்திற்கு வந்தார். தவான் 54 பந்துகளில் 85 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தார். எல்பிடபிள்யூ முறையில் அவரை தாக்கூர் வெளியேற்றினார்.
சென்னை அணியின் பந்துவீச்சை டெல்லி தொடக்க வீரர்கள் நாலாபுறமும் சிதறடித்தனர். தீபக் சாஹர், சாம் கரண், தாக்கூர், ஜடேஜா, மொயின் அலி, பிராவோ என ஆறு பேர் பந்துவீசியும் அணிக்குத் தேவையான நேரத்தில் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை.
இறுதியில் 8 பந்துகள் மீதமிருக்கையில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 190 ஓட்டங்களைக் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
சென்னை அணி முதல் போட்டியிலேயே தோல்வி அடைந்தது அதன் ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.