சென்னை: படகோட்டத்தில் சிறந்து விளங்கினாலும் பரதநாட்டியம் மூலம் பலன்கள் பல பெற்றதாகக் கூறியுள்ளார் சென்னையைச் சேர்ந்த இளம் வீராங்கனை நேத்ரா குமணன்.
படகு ஓட்டும் போட்டிக்காக ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்ற முதல் இந்திய வீராங்கனை என்கிற பெருமையை இவர் பெற்றுள்ளார். இதற்கு முன்பு படகு ஓட்டும் போட்டியில் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்ற ஒன்பது பேரும் ஆண்களே.
வரும் ஜூலை மாதம் ஜப்பானில் ஒலிம்பிக் விளையாட்டுகள் நடைபெற உள்ளன. ஆசிய நாடுகள் சார்பில் பாய்மர படகுப் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஓமானில் நடைபெற்றபோது லேசர் ரேடியல் மகளிர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற நேத்ர, 22, முதல் இடம் பிடித்து புள்ளிகளின் அடிப்படையில் ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றார்.
சிறு வயதிலிருந்தே படகோட்டும் ஆர்வம் கொண்டிருந்த நேத்ரா, 2014, 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பாகப் பங்கேற்றார். 2014 இன்சியான் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றபோது இவருக்கு வெறும் 16 வயதுதான். அப்போது ஏழாம் இடம் பெற்றவர், 2018 ஜகார்த்தா தொடரில் ஐந்தாம் இடத்துக்கு முன்னேறினார். மையாமியில் நடந்த உலகக் கிண்ணப் போட்டியில் வெண்கலம் வென்று, உலகக் கிண்ண படகோட்டுதலில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனையைப் படைத்தார் நேத்ரா.
இப்படி தொடர்ந்து தன் செயல்பாட்டில் முன்னேற்றம் காட்டிவந்தவர், இப்போது உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் தொடருக்குத் தேர்வாகி சரித்திரம் படைத்திருக்கிறார்.
தற்போது இயந்திரப் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்துவரும் நேத்ரா, பரதநாட்டியத்தை ஆர்வமாகக் கற்றுக்கொண்டவர். படகோட்டத்தைக் கற்றுக்கொள்ள பரதநாட்டிய வகுப்புகளைக் கைவிடவேண்டி வந்ததாக 'இந்தியன் எக்ஸ் பிரஸ்' செய்தித்தாளிடம் அவர் தெரி வித்தார். "பரதநாட்டியம் எனக்கு ஒழுக்கம், கடின உழைப்பு, அர்ப்பணிப்பு போன்ற பல நல்ல அம்சங்களைக் கற்றுத் தந்துள்ளது. இன்று வரை எனக்கு உதவக்கூடிய பல விஷயங்கள் நாட்டியம் மூலமாகக் கிடைத்தவை," என்று கூறும் அவர், அலமேலு வள்ளி என்னும் நாட்டிய ஆசிரியரிடம் ஆறாண்டுகள் பரதம் கற்றவர்.