ஆம்ஸ்டர்டாம்: காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற டென்மார்க்-வேல்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே சிங்கப்பூர் நேரப்படி இன்று நள்ளிரவு கடுமையான போட்டி நிலவ இருக்கிறது. இந்த ஆட்டம் ஹாலந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெறுகிறது.
டென்மார்க் அதன் முதல் ஆட்டத்தில் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. அதன் மத்தியதிடல் ஆட்டக்காரரான கிறிஸ்டியன் எரிக்சனுக்கு ஆட்டத்தின்போது இதய செயலிழப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.
இந்தப் பாதிப்பிலிருந்து மீண்ட டென்மார்க், காலிறுதிச் சுற்றுக்கு முந்திய ஆட்டத்துக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில், டென்மார்க்கிற்கு எதிரான ஆட்டம் சவால்மிக்கதாக இருக்கும் என்று வேல்ஸ் அணியின் தற்காப்பு ஆட்டக்காரர் கோனர்ஸ் ராபர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற தமது சக வீரர்கள் முனைப்புடன் இருப்பதாக அவர் கூறினார்.
இன்றைய ஆட்டத்தில் டென்மார்க்கிற்கு உலகெங்கும் உள்ள பல காற்பந்து ரசிகர்கள் ஆதரவு அளிப்பர் என்றார் அவர். டென்மார்க் வெற்றி பெறும் என்று பெரும்பாலானோர் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
"முதல் சுற்றோடு எங்கள்
பயணம் முடியும் என்று பலர்
நம்பினர். அது தவறு என்பதை நாங்கள் நிரூபித்துவிட்டோம்," என்றார் ராபர்ட்ஸ்.
இதற்கிடையே, முதல் சுற்று ஆட்டத்தில் ரஷ்யாவை 4-1 எனும் கோல் கணக்கில் பந்தாடிய டென்மார்க், வேல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்திலும் கோல் மழை பொழிய காத்துக்கொண்டிருக்கிறது.

