லண்டன்: ஐரோப்பிய கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு இங்கிலாந்தும் இத்தாலியும் தகுதி பெற்றுள்ளன. இந்த ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி வரும் திங்கட்கிழமை அதிகாலை 3 மணிக்கு இங்கிலாந்தின் வெம்பிலி விளையாட்டரங்கத்தில் நடை
பெறும்.
55 ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பிய கிண்ணக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள இங்கிலாந்து, கிண்ணத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று முனைப்
புடன் இருக்கிறது.
அரையிறுதி ஆட்டத்தில் டென்மார்க்கை 2-1 எனும் கோல் கணக்கில் வீழ்த்திய இங்கிலாந்து, இறுதி ஆட்டத்திலும் வெற்றி பெற
வியூகம் வகுத்து வருகிறது.
சொந்த மண்ணில் விளையாடு வது அதற்கு சாதகமாக அமையக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இங்கிலாந்தை எதிர்த்துக் களமிறங்கும் குழு சாதாரணமானதல்ல. காற்பந்து உலகில் தடம் பதித்துள்ள இத்தாலியும் ஐரோப்பிய கிண்ணத்துக்குக் குறிவைத்துள்ளது.
அரையிறுதி ஆட்டத்தில் அது ஸ்பெயினுடன் மோதியது. ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் முடிந்ததால் பெனால்டி ஷுட்அவுட் நடத்தப்பட்டது. இதில் 4-2 எனும் கோல் கணக்கில் மன்சினியின் படை வாகை சூடியது.
இந்நிலையில், இத்தாலியை முறியடிப்பது எளிதல்ல என்றும் அது கடுமையான சவாலாக விளங்கும் என்றும் இங்கிலாந்தின் நிர்வாகியும் முன்னாள் நட்சத்திர
வீரருமான கேரத் சவுத்கேட் தமது அணியினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"அரையிறுதியில் வெற்றி பெற்றதும் நாங்கள் கொண்டாடினோம். இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி
இருப்பது மகிழ்ச்சிக்குரியது. ஆனாலும் இன்னும் ஒரு தடைக்கல் உள்ளது.
"அதுதான் இத்தாலி. இத்தாலி மிகவும் வலிமைமிக்க குழுவாகும். இப்போட்டியில் இத்தாலிய ஆட்டக்காரர்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.
"அனுபவமிக்க தற்காப்பு ஆட்டக்காரர்கள் அக்குழுவுக்குப் பலம் சேர்க்கின்றனர்.
"இறுதி ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதைப் பார்ப்பதற்கு அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்துக்
கொண்டிருக்கின்றனர்.
"இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறுவதே எங்கள் இலக்கு. அதற்காக நாங்கள் தயாராகி வருகிறோம். டென்மார்க்கிற்கு எதிரான ஆட்டம் எங்கள் ஆட்டக்காரர்களை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் களைப்படையச் செய்துள்ளது.
"நன்றாக ஓய்வு எடுத்த பிறகு இறுதி ஆட்டத்துக்கு தயாராவோம். இத்தாலியின் நிலையும் எங்களைப் போன்றதுதான். ஆனால் அதற்குக் கூடுதலாக ஒருநாள் ஓய்வு கிடைத்துள்ளது," என்று சவுத்கேட் கூறினார்.
கடந்த உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெறத் தவறிய இத்தாலி, இம்முறை ராபர்ட்டோ மன்சினியின் நிர்வாகத்தின்கீழ் அபாரமாகச் செயல்பட்டு வருகிறது. வலுவான தற்காப்பு அரணைக் கொண்டுள்ள இத்தாலிக்கு எதிராக கோல் போடுவது சிரமம். அதே வேளையில், கோல் வேட்டையில் இறங்கும் வீரர்களையும் அது கொண்டுள்ளது. இரு குழுக்களும் வலிமைமிக்கவை என்பதால் வெற்றியாளரை முன்னுரைப்பது முடியாத காரியமாக இருக்கிறது.
இத்தகைய சவால்மிக்க ஆட்டங்களில் கோல் போட கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பயன்
படுத்திக்கொள்வதே வெற்றிக்கு வித்திடும். அதுமட்டுமல்ல, தற்காப்பில் கவனச் சிதறல்கள் ஏற்படக்கூடாது. அவ்வாறு நேர்ந்தால் கண்ணிமைக்கும் நேரத்தில் கிண்ணம் பறிபோய்விடும்.
எனவே, வலிமையுடன் இருந்தால் மட்டும் போதாது ஆட்டத்தின்போது செயல்படும் விதம் மிகவும் முக்கியம் என்பதை அனுபவம்வாய்ந்த இவ்விரு குழுக்களும் நன்கு அறிந்துவைத்துள்ளன.

