தோக்கியோ: வரும் வெள்ளிக்கிழமையன்று தொடங்கவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படலாம் எனப் போட்டியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டொஷிரோ மூட்டோ கூறியுள்ளார். அதிகமானோரிடையே கிருமி பரவி வருவதையொட்டி அவர் அவ்வாறு சொன்னார். எத்தனை பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்காணித்து தேவைப்பட்டால் ஏற்பாட்டாளர்களுடன் கலந்து பேசப்போவதாகத் திரு மூட்டோ செய்தியாளர் கூட்டத்தில் குறிப்பிட்டார்.
வரும் நாட்களில் எத்தனை பேருக்குக் கிருமித்தொற்று ஏற்படும் என்பதைக் கணிக்கமுடியாது, கூடுதலானோர் பாதிக்கப்பட்டால் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அவர் கூறினார்.
தேவைப்பட்டால் அதைப் பற்றி சிந்திக்கலாம் என்று அவர் சொன்னார். எனினும், விளையாட்டுகளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான விளையாட்டாளர்கள், அதிகாரிகள், செய்தியாளர்கள் ஆகியோர் ஜப்பான் சென்றுவிட்டனர். அதனால் திரு மூட்டோ அரசியல் காரணங்களுக்காக அவ்வாறு கூறியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
பல சர்ச்சைகளுக்கு மத்தியில் விளையாட்டுகளை நடத்தவிருப்பதை ஜப்பானிய மற்றும் ஒலிம்பிக் அதிகாரிகள் இதுவரை தற்காத்துப் பேசியுள்ளனர். போட்டியில் பங்கேற்கவுள்ள விளையாட்டாளர்களில் 80 விழுக்காட்டினருக்கு கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது.