தோக்கியோ: தென்னாப்பிரிக்காவின் ஆண்கள் காற்பந்து அணியில் சிலர் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளானதால் ஜப்பானுக்கு எதிரான அதன் ஆட்டத்தில் 11 விளையாட்டாளர்களை ஆடவைக்க அணி சிரமப்படக்கூடும். ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்கேற்க ஜப்பானுக்குச் செல்வதற்கு முன்னரே தென்னாப்பிரிக்க அணியில் பலருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது. இந்த சவாலை அணி எதிர்கொள்ளும் விதம், கிருமிப் பரவல் சூழலில் வெற்றிகரமாக ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்துவதற்கான அளவுகோலாக அமையலாம்.
அனைத்துலகக் காற்பந்து கூட்டமைப்பின் விதிமுறைகளின்படி ஓர் ஆட்டத்தை நடத்த இரண்டு அணிகளிடமும் குறைந்தது 13 விளையாட்டாளர்கள் இருக்க வேண்டும்.
கிருமிப் பரவல் நிலவரத்தால் தனது அணியின் எந்தெந்த விளையாட்டாளர்கள் ஆட்டத்தில் இடம்பெறுவர் என்பதை உறுதியாகச் சொல்லமுடியாது எனத் தென்னாப்பிரிக்கப் பயிற்றுவிப்பாளர் டேவிட் நொட்டோவானே தெரிவித்துள்ளார்.
அணியில் கிருமித்தொற்று இடம்பெற்றதால் விதிமுறைகளின்படி பல முறை சோதனைகள் நடத்தப்பட்டன. அதனால் கிட்டத்தட்ட ஒரு வாரமாகப் பயிற்சிகளை மேற்கொள்ளமுடியாமல் போனதை அவர் குறிப்பிட்டார்.
ஒலிம்பிக் விளையாட்டுகளில் பொதுவாக ரசிகர்கள் நன்கு அறிந்துள்ள காற்பந்து வீரர்கள் அதிகம் இருக்கமாட்டார்கள்.
பங்கேற்கும் தேசிய அணிகளின் 23 வயதுக்கு உட்பட்ட வீரர்கள்தான் அதிகம் இடம்பெறுவர்.
அதோடு, உலகளவில் பொதுவாக சிறப்பாக ஆடும் அணிகள் ஒலிம்பிக்கிலும் அவ்வாறே செய்யும் எனக் கூறமுடியாது. நைஜீரியா, கெமரூன், மெக்சிக்கோ போன்ற அணிகள் தங்கப் பதக்கத்தை வென்றிருக்கின்றன.
2016 போட்டியில்தான் பிரேசில் காற்பந்தில் தனது முதல் ஒலிம்பிக் தங்கத்தை வென்றது.
ஒலிம்பிக் விளையாட்டுகளில் மட்டும்தான் பிரிட்டனுக்கென ஒரு காற்பந்து அணி பங்கேற்கும்.
உலகக் காற்பந்தில் பிரிட்டனில் உள்ள நான்கு பகுதிகளுக்கும் தனி தேசிய அணிகள் உள்ளன.
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து. வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய அணிகள் பொதுவாக அனைத்துலகக் காற்பந்து போட்டிகளில் பங்கேற்கும்.