தோக்கியோ: ஒலிம்பிக் அம்பெய்தல் போட்டியில் நேற்று நடந்த தனிநபர் தகுதிச் சுற்றில் முதல் மூன்று இடங்களையும் தென்கொரிய மகளிரே பிடித்தனர்.
ஆண்கள் 64 பேர், பெண்கள் 64 பேர் என மொத்தம் 128 பேர் நேற்று தகுதிச் சுற்றில் பங்கேற்றனர். அதிகபட்சம் 720 புள்ளிகளைப் பெற முடியும் என்ற நிலையில், தாங்கள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் அவர்கள் தரப்படுத்தப்பட்டனர்.
பெண்கள் பிரிவில் 680 புள்ளிகள் என்ற புதிய சாதனையுடன் முதலிடம் பிடித்தார் தென்கொரியாவின் 20 வயதான ஆன் சான். 1996ஆம் ஆண்டு அட்லாண்டாவில் படைக்கப்பட்ட சாதனையைத் தகர்த்த ஆன் சான், நடப்பு ஒலிம்பிக்கில் முதன்முதலில் சாதனையை முறியடித்தவர் என்ற பெருமையைப் பெற்றார்.
"என்னால் முடிந்தளவிற்குச் சிறப்பாக முயன்றேன். அது நல்ல முடிவைத் தந்தது," என்றார் ஆன்.
ஒலிம்பிக் போட்டிகளில் அம்பெய்தல் விளையாட்டில் படைக்கப்பட்ட எல்லாச் சாதனைகளுக்கும் தென்கொரிய மகளிரே சொந்தக்காரர்கள். 1988ஆம் ஆண்டிலிருந்து குழு அளவிலான போட்டிகளில் அவர்களே தங்கம் வென்று வந்து உள்ளனர்.
இந்நிலையில், இம்முறையும் அவர்களே தங்கத்தைத் தட்டிச் சென்றால், ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு குறிப்பிட்ட விளையாட்டில் நீண்டகாலமாகத் தங்கத்தைத் தக்கவைத்துக்கொண்டவர்கள் என்ற சாதனையை அவர்கள் படைப்பர்.
முன்னதாக, அம்பெய்தலில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதப்படும் தீபிகா குமாரி தகுதிச் சுற்றில் 663 புள்ளிகளைப் பெற்று ஒன்பதாம் இடத்தையே பிடித்தார். அதுபோல, ஆண்கள் பிரிவிலும் பிரவீண் ஜாதவ், அத்தனு தாஸ், தருண்தீப் ராய் ஆகியோர் முறையே 656, 653, 652 புள்ளிகளைப் பெற்று ஏமாற்றம் அளித்தனர்.
மயங்கி விழுந்த ரஷ்ய வீராங்கனை
இதற்கிடையே, அம்பெய்தல் தகுதிச் சுற்றின்போது வெப்பம் தாங்காமல் ஸ்வெட்லானா கோம்போவா என்ற ரஷ்ய வீராங்கனை மயங்கிச் சரிந்தார். இதையடுத்து, சூட்டைக் குறைக்கும் விதமாக உடனடியாக அவரது தலையில் பனிக்கட்டிப்பை வைக்கப்பட்டு, முதலுதவி அளிக்கப்பட்டது.
கோம்போவா உடல்நிலை தேறி வருவதாகவும் போட்டிகளில் அவர் விரைவில் பங்கேற்பார் என்றும் சக ரஷ்ய வீராங்கனையான செனியா பெரோவா தெரிவித்தார்.
வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்வரை செல்லலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பயிற்றுநர்களும் பணியாளர்களும் நிழல் தேடி மரங்களைத் தஞ்சமடைந்ததைக் காண முடிந்தது.

