தோக்கியோ: பெண்கள் டென்னிஸ் உலத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலிய வீராங்கனை ஏஷ்லேய் பார்டி ஒலிம்பிக் போட்டிகளின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் வெளியேற்றப்பட்டார்.
சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்புதான் பார்டி விம்பிள்டன் பொதுவிருதை வென்றார்.
ஆனால் நேற்றோ முதல் சுற்றில் ஸ்பெயினின் சாரா சொரிபெஸ் டோர்மோவிடம் 6-4, 6-3 என்ற செட் விகிதத்தில் தோல்வியுற்றார்.
ஆட்டத்தின் எந்தக் கட்டத்திலும் பார்டியால் சரியாக விளையாட முடியவில்லை.
பெண்கள் டென்னிஸ் தரவரிசையில் 48வது இடத்தில் உள்ள சொரிபெஸ் டோர்மோவை அவர்தான் வெல்வார் எனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
தனது தோல்வியைத் தொடர்ந்து பெரும் மன வருத்தத்திற்கு ஆளான பார்டி, செய்தியாளர்களிடம் பேச மறுத்தார்.
இரண்டாம் சுற்றில் பிரான்சைச் சேர்ந்த ஃபியோனா ஃபெரோவைச் சந்திப்பார் சொரிபெஸ் டோர்மோ.
மற்றொரு பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஜப்பானின் நவோமி ஒசாக்கா சீனாவின் செங் சாய்சாயை 6-1, 6-4 எனும் செட் விகிதத்தில் வென்றார்.
மனநலப் பிரச்சினைகளை எதிர்நோக்கியதால் பிரெஞ்சு பொதுவிருதுப் போட்டியிலிருந்து வெளியேறிக்கொண்டு சிறிது காலம் ஓய்வெடுத்தார் ஒசாக்கா.
அதற்குப் பிறகு இதுதான் அவர் விளையாடிய முதல் ஆட்டம்.
தங்கம் வெல்லக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளதாகப் பலரால் கருதப்படும் ஒசாக்கா, அடுத்த சுற்றில் சுவிட்சர்லாந்தின் விக்டோரியா கொலூபிச்சைச் சந்திப்பார்.
பலருக்கு சிலர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தாலும் பெண்கள் டென்னிஸில் இப்போதெல்லாம் எதிர்பாரா முடிவுகள் அதிகம் வந்த வண்ணம் இருக்கின்றன.