தோக்கியோ: இன்னும் ஒரே ஒரு போட்டியில் வென்றுவிட்டால் போதும், சிங்கப்பூர் மேசைப்பந்து வீராங்கனை யு மெங்யுவின் ஒலிம்பிக் பதக்கக் கனவு நனவாகிவிடும்.
மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், உலகின் பத்தாம் நிலை வீராங்கனையான ஜப்பானின் கசுமி இஷிகாவாவை 8-11, 11-5, 14-12, 11-6, 11-2 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்து அதிர்ச்சி அளித்தார் 31 வயதான மெங்யு.
தொடக்க விழாவில் பூப்பந்து ஆட்டக்காரர் லோ கீன் இயூவுடன் சேர்ந்து சிங்கப்பூர்க் கொடியை உயர்த்திப் பிடித்துச் சென்ற மெங்யு, இந்த வெற்றி தமக்கு எளிதாகக் கிடைக்கவில்லை என்றார்.
"எதிராளி நேர்த்தியாக ஆடியதால் அவரை எதிர்கொள்வது கடினமாக இருந்தது," என்றார் மெங்யு.
மூன்றாவது செட்டே போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தியதாக இவர் குறிப்பிட்டார்.
"10-8 என்று பின்தங்கியபோதும் ஒருவாறாக சில புள்ளிகளை நான் கைப்பற்றிவிட்டேன். அது எனக்கு ஊக்கமளிக்கவே, எதிராளியை நெருக்கடிக்கு உள்ளாக்கினேன்," என்று மெங்யு சொன்னார்.
அடுத்ததாக, இன்று நடக்க உள்ள அரையிறுதியில் மெங்யு, உலகின் முதல்நிலை ஆட்டக்காரரான சீனாவின் சென் மெங்குடன் பொருதவிருக்கிறார்.
காலிறுதியில் சென் மெங் 12-10, 11-9, 11-6, 11-5 என்ற புள்ளிக் கணக்கில் ஹாங்காங்கின் டூ ஹோய் கெம்மை வீழ்த்தினார்.
அரையிறுதியில் மெங்யு வெற்றி பெற்றால் குறைந்தது வெள்ளிப் பதக்கம் உறுதியாகிவிடும். இல்லையேல், வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இவர் விளையாட வேண்டியிருக்கும்.
இதனிடையே, சிங்கப்பூரின் முதல்நிலை வீராங்கனையும் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான ஃபெங் டியான்வை, காலிறுதிக்கு முந்திய சுற்றில் ஜெர்மனியின் ஹன் யிங்கிடம் 13-11, 11-7, 11-9, 8-11, 11-8 என்ற புள்ளிக் கணக்கில் தோற்றுப்போனார்.

