லண்டன்: உலகின் முன்னணித் தற்காப்பு ஆட்டக்காரர்களில் ஒருவராகக் கருதப்படும் பிரான்சின் ரஃபாயல் வரான், 28 (படம்), அடுத்த பருவத்தில் இருந்து மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுவிற்காக விளையாடவிருக்கிறார்.
கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து ஸ்பெயினின் ரியால் மட்ரிட் குழுவிற்காக விளையாடி வரும் வரானை ஒப்பந்தம் செய்ய நீண்டகாலமாக மேன்யூ மேற்கொண்ட முயற்சி ஒருவாறாகக் கைகூடி இருக்கிறது.
இதற்காக எவ்வளவு தொகை கைமாறும் என்பது தெரிவிக்கப் படவில்லை என்றபோதும் 41 மில்லியன் பவுண்டாக (S$77 மி.) இருக்கலாம் என்று 'கோல்.காம்' செய்தி தெரிவிக்கிறது.
இதையடுத்து, வரான் அடுத்த வாரம் மான்செஸ்டருக்கு வந்து மருத்துவச் சோதனைகளில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரியால் மட்ரிட் குழுவிற்காக 360 போட்டிகளில் ஆடி இருக்கும் வரான், அக்குழு சார்பில் நான்கு முறை சாம்பியன்ஸ் லீக் பட்டம் உட்பட 18 பட்டங்களை வென்று இருக்கிறார். அத்துடன், 2018ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் வென்ற பிரெஞ்சு அணியிலும் இவர் இடம்பெற்றிருந்தார்.
முன்னதாக, ஜெர்மனியின் டோர்ட்மண்ட் குழுவிடமிருந்து இங்கிலாந்து தாக்குதல் ஆட்டக்காரர் ஜேடன் சாஞ்சோவை $136 மி. விலைகொடுத்து மேன்யூ வாங்கியது. பிரிட்டிஷ் கோல்காப்பாளர் டாம் ஹீட்டனும் மேன்யூவுடன் இணைந்துள்ளார்.

