கொழும்பு: இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பு பிரேமதாசா அரங்கில் வியாழன் இரவு நடந்தது. அதில் இந்தியாவை 81 ஓட்டங்களில் சுருட்டி தொடரை இலங்கை வென்றது.
பூவா, தலையா போட்டதில் வென்ற இந்திய அணித் தலைவர் தவான் முதலில் பந்தடிக்க முடிவு செய்தார். போதிய அனுபவம் இல்லாத இந்திய வீரர்கள், அந்த ஆடு களத்தில் இலங்கையின் சுழல் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் திண்டாடினர்.
முதல் ஓவரிலேயே தலைவர் தவான் வீழ்ந்தார். 36 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி ஊசலாடியது. 20 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 81 ஓட்டங்களில் முடங்கியது. அனைத்துலக 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணியின் 3வது குறைந்தபட்ச அளவு இதுவாகும்.
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா, தனது 24வது பிறந்த நாளான வியாழக்கிழமை, 4 ஓவர்களில் வெறும் 9 ஓட்டங்கள் மட்டும் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகளை சாய்த்தார்.
பின்னர் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி, 14.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 82 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் இந்தியாவும், 2வது ஆட்டத்தில் இலங்கையும் வெற்றி பெற்றிருந்தன.
இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை இலங்கை வென்றது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

