பியூனஸ் அய்ரஸ்: அனைத்துலகப் போட்டிகளில் ஆக அதிக கோல்களை அடித்த தென்னமெரிக்க வீரர் என்ற பெருமையை பிரேசில் முன்னாள் நட்சத்திரம் பெலேவிடம் இருந்து தட்டிப் பறித்துக்கொண்டார் அர்ஜெண்டினா அணித்தலைவர் லயனல் மெஸ்ஸி.
பொலிவியாவிற்கு எதிராக நேற்று நடந்த உலகக் கிண்ணத் தகுதிச்சுற்று ஆட்டத்தில் மெஸ்ஸி மூன்று கோல்களைப் போட்டு 'ஹாட்ரிக்' சாதனை நிகழ்த்த, அர்ஜெண்டினா 3-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.
இதுவரை 153 அனைத்துலகப் போட்டிகளில் விளையாடி இருக்கும் மெஸ்ஸி, 79 கோல்களை அடித்துள்ளார்.
பெலே 92 ஆட்டங்களில் 77 கோல்களைப் போட்டுள்ளார்.
"இந்தத் தருணத்திற்காக வெகுநாள்களாகக் காத்திருந்தேன். இப்படியொரு நாள் வரும் என்று கனவும் கண்டேன்," என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார் மெஸ்ஸி.
கொவிட்-19 தொற்று பரவத் தொடங்கிய பிறகு, நேற்றைக்குத்தான் தங்களது தேசிய அணி பங்கேற்ற ஆட்டத்தை நேரில் காண அர்ஜெண்டினா ரசிகர்கள் முதன்முதலாக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த மகிழ்ச்சியான வேளையில், அண்மையில் வென்ற 'அமெரிக்கக் கிண்ணத்தை' 21,000 ரசிகர்கள் முன்பாக உயர்த்திக் காட்டி, அர்ஜெண்டினா வீரர்கள் கொண்டாடினர். இவ்வாண்டு ஜூலையில் நடந்த அத்தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலைத் தோற்கடித்தது.
"அந்த வெற்றியைக் கொண்டாட இதைவிடச் சிறப்பான வழி இருக்க முடியாது. என் தாயார் இங்குள்ளார். என் உடன்பிறந்தவர்கள் பார்வையாளர் பகுதியில் உள்ளனர். எங்களின் வெற்றியைக் கொண்டாட அவர்கள் எல்லாரும் இங்கு வந்துள்ளனர். மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது," என்றார் மெஸ்ஸி.
இதனிடையே, நேற்று நடந்த இன்னோர் ஆட்டத்தில் நட்சத்திர வீரர் நெய்மார் தன் பங்கிற்கு ஒரு கோலடிக்க, பிரேசில் 2-1 என்ற கணக்கில் பெருவை வீழ்த்தியது.