மான்செஸ்டர்: கொவிட்-19 கிருமி மேலும் பலரைத் தொற்றிவிடலாம் என்ற அச்சம் காரணமாக இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே மான்செஸ்டரில் நேற்று தொடங்க இருந்த 5வது, கடைசி டெஸ்ட் போட்டி கைவிடப்பட்டது.
நான்காவது போட்டியின்போது இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரிக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அதனால், பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளர் பரத் அருண், களக்காப்புப் பயிற்றுநர் ஸ்ரீதர், இயன் சிகிச்சை நிபுணர் நித்தின் பட்டேல் ஆகியோர் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியதாயிற்று.
இந்நிலையில், துணை இயன் சிகிச்சை நிபுணர் யோகேஷ் பார்மருக்குக் கடந்த புதனன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து, ஐந்தாவது போட்டிக்கான அணியைக் களமிறக்க முடியாத நிலை இந்தியாவிற்கு ஏற்பட்டதாக இங்கிலாந்து, வேல்ஸ் கிரிக்கெட் வாரிய அறிக்கை தெரிவித்தது.
நான்கு போட்டிகள் முடிவில் இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றிருந்தது. இதனிடையே, ஐந்தாவது போட்டியில் விளையாட இந்திய வீரர்கள் தயங்கியதாக் கூறப்படுகிறது. இதனையடுத்து, அவர்களின் பாதுகாப்பு கருதி, போட்டி காலவரம்பின்றி தள்ளிவைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய வட்டாத்தைச் சுட்டி 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி வெளியிட்டுள்ளது.