துபாய்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவரும் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலி, 34, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டி மூலம் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் அடியெடுத்து வைத்தார் மொயீன்.மொத்தம் 64 போட்டிகளில் விளையாடியிருக்கும் இவர் 2,914 ஓட்டங்களை எடுத்துள்ளதோடு, 194 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார்.
2019ஆம் ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்த இவர், அடுத்த மாதம் நடக்கவிருக்கும் டி20 உலகக் கிண்ணத்திற்கான அவ்வணியிலும் இடம்பிடித்துள்ளார்.
குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடியாமல் போவதை அடுத்து, மொயீன் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், ஒருநாள், டி20 போட்டிகளில் இவர் தொடர்ந்து விளையாடுவார்.
“என்னால் முடிந்தவரை விளையாட விரும்புகிறேன். எனது ஆட்டத்தை அனுபவித்து மகிழ விரும்புகிறேன்,” என்று கூறும் மொயீன், அனைத்துலக அளவில் 112 ஒருநாள் போட்டிகளிலும் 38 டி20 போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி சார்பில் களமிறங்கியுள்ள இவர், இதுவரை ஒன்பது போட்டிகளில் விளையாடி 261 ஓட்டங்களைக் குவித்திருப்பதோடு, ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.