மான்செஸ்டர்: காற்பந்து ஆட்டத்தை நடுவர் முடித்துவைப்பதற்கு முன்பு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கு நேற்று முன்தினம் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் காற்பந்து ஆட்டம் ஓர்
எடுத்துக்காட்டு.
சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் வில்லாரியால் குழுவை 2-1 எனும் கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் வீழ்த்தியது.
ஆனால் இறுதிவரை இலட்சியத் தீ அணையாமல் போராடியதால் மட்டுமே யுனைடெட்டால் வாகை சூட முடிந்தது.
ஆட்டம் முடிய சில வினாடிகள் மட்டுமே எஞ்சியிருந்தபோது
நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ போட்ட கோல் யுனைடெட்டுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தது.
வெற்றி கோல் போட்டது மட்டுமல்லாது, சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் ஆக அதிக ஆட்டங்களில் களமிறங்கிய ஆட்டக்காரர் என்ற சாதனையையும் ரொனால்டோ நேற்று முன்தினம் படைத்தார்.
முற்பாதி ஆட்டத்தில் இரண்டு குழுக்களும் எவ்வளவு முயன்றும் கோல் போட முடியவில்லை. இடைவேளையின்போது ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் இருந்தது.
இந்நிலையில், ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் வில்லாரியால் குழு கோல் போட்டு ஓல்ட் டிராஃபர்ட் விளையாட்டரங்கத்தில் கூடிஇருந்த யுனைடெட் ரசிகர்களை அதிர்ச்சியில் உறையவைத்தது.
இந்த எதிர்பாராப் பின்னடைவு ஏற்பட்டும் துவண்டுவிடாமல் போராடிய யுனைடெட், அடுத்த ஆறு நிமிடங்களிலேயே கோல் போட்டு ஆட்டத்தை சமன் செய்தது.
பெனால்டி எல்லைக்கு வெளியிலிருந்து தற்காப்பு ஆட்டக்காரர் அலெக்ஸ் டெல்லேஸ் அனுப்பிய பந்து வில்லாரியால் தற்காப்பு ஆட்டக்காரர்கள், கோல்காப்பாளர் ஆகிய அனைவரையும் கடந்து சென்று பார்ப்பவர் வியக்கும்
வண்ணம் வலையைத் தீண்டியது.
இதற்கு முன்பு களமிறங்கிய நான்கு ஆட்டங்களில் மூன்று ஆட்டங்களை யுனைடெட் கோட்டைவிட்டது. எனவே, வில்லாரியாலுக்கு எதிரான ஆட்டத்தில் எப்படியாவது மீண்டும் வெற்றியைச் சுவைக்க வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடிய யுனைடெட் தாக்கு
தலைத் தீவிரப்படுத்தியது.
மறுமுனையில், நாங்கள் எவ்
வகையிலும் சளைத்தவர்கள் அல்ல எனப் போர்க் கொடி உயர்த்திய வில்லாரியால், கோல் வேட்டையில் இறங்கியது.
யுனைடெட்டின் கோல்காப்பாளர் டேவிட் டி ஹயவும் தற்காப்பு ஆட்டக்காரர்களும் விழிப்புடன்
இருந்திருக்காவிட்டால் வில்லாரியால் நிச்சயம் கோல் போட்டிருக்கும்.
அந்த வகையில் அது அருமையாக விளையாடியது. ஆனால் அதன் கோல் முயற்சிகளை யுனைடெட்டின் தற்காப்பு அரண் மிகச் சிறப்பான முறையில் தடுத்து நிறுத்தி முறியடித்தது.
இரு குழுக்களுக்கும் தரப்புக்கு ஒரு புள்ளிதான் கிடைக்கும் என்று பரவலாக நம்பப்பட்டபோது, மூன்று புள்ளிகள்தான் வேண்டும் என்று அடித்துக்கூறும் வகையில் யுனைடெட்டின் கடைசிக்கட்ட தாக்குதல் அமைந்தது. கோல் பசியுடன் ஆவலுடன் காத்திருந்த ரொனால்டோவிடம் பந்து செல்ல, கிடைத்த வாய்ப்பை அவர் நழுவவிடவில்லை.
அவர் அனுப்பிய பந்து வலைக்குள் சென்றதை அடுத்து, ஓல்ட் டிராஃபர்ட் விளையாட்டரங்கத்தில் நீண்டநாள் கேட்காத கொண்டாட்ட ஒலி மீண்டும் அவ்விடத்தை அதிரவைத்தது. இனி வெற்றிப் பயணம் தொடரும் என்ற நம்பிக்கை அக்குழுவின் மீது உயிரையே வைத்திருக்கும் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

