டுரின்: கடந்த பருவத்தைப் போலவே இப்பருவத்திலும் சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் கிண்ணத்தைக் கைப்பற்ற நடப்பு வெற்றியாளரான செல்சி கொண்டுள்ள இலக்கு ஆட்டங்கண்டுள்ளது. இதற்கு இத்தாலியின் யுவெண்டஸ் குழுவின் அதிரடி ஆட்டமே காரணம்.
நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் 1-0 எனும் கோல் கணக்கில் செல்சியை யுவெண்டஸ் தோற்கடித்தது.
பிற்பாதி ஆட்டம் தொடங்கிய பத்து வினாடிகளில் ஆட்டத்தின் ஒரே கோலை யுவெண்டஸ் ஆட்டக்காரர் ஃபெடரிக்கோ கியேசா போட்டார்.
இத்தாலிய லீக்கில் ஏமாற்றம் தரும் வகையில் விளையாடி வரும் யுவெண்டஸ், யாரும் எதிர்பார்க்கா வண்ணம் சாம்பியன்ஸ் லீக்
போட்டியில் சக்கைப்போடு போட்டு வருகிறது.
செல்சியை வீழ்த்தியதை அடுத்து, அது 'எச்' பிரிவில் முன்னிலை வகிக்கிறது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் செல்சி ஆதிக்கம் செலுத்தியது.
ஆனால் செல்சியைவிட யுவெண்டசுக்கு கோல் போடும் வாய்ப்புகள் அதிகம் அமைந்தன.
இருப்பினும், கிடைத்த பல வாய்ப்புகளை யுவெண்டஸ் விரயமாக்கியது.
இத்தாலிய லீக்கில் நடப்பது போலவே சாம்பியன்ஸ் லீக்கிலும் நடந்துவிடுமோ என்று யுவெண்டஸ் ரசிகர்களிடையே அச்சம் நிலவியது. ஆனால் அந்த அச்சத்துக்கு, பிற்பாதி தொடங்கியவுடன் முற்றுப்புள்ளி வைத்தார் கியேசா.
இதற்கிடையே, தோல்வி குறித்து செல்சி குழுவினர் வருத்தம் தெரிவித்தனர்.
இனி அடுத்தடுத்த ஆட்டங்களில் சிறப்பாக விளையாட செல்சி ஆட்டக்காரர்கள் முனைப்புடன் இருப்பர் என்பதில் சந்்தேகமில்லை என்று காற்பந்து விமர்சகர்கள் கூறுகின்றனர்.