ஷார்ஜா: இந்திய பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 'பிளே ஆஃப்' சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிராக நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் சென்னை அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதனையடுத்து, 18 புள்ளிகளுடன் பட்டியலில் தனது முதலிடத்தையும் அவ்வணி வலுப்படுத்திக்கொண்டது.
முதலில் பந்தடித்த ஹைதராபாத் அணியை ஓட்டம் குவிக்கவிடாமல் சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் கடும் சவாலாக விளங்கினர்.
கடந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணியின் ஆட்ட நாயகனாக மிளிர்ந்த தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராயை இம்முறை இரண்டு ஓட்டங்களிலேயே வெளியேற்றினார் ஹேசல்வுட்.
ஹைதராபாத் அணியின் இன்னொரு தொடக்க வீரரான ரித்திமான் சாஹா அதிகபட்சமாக 44 ஓட்டங்களை எடுத்தார். 20 ஓவர் முடிவில் அவ்வணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
ஹேசல்வுட் மூன்று விக்கெட்டுகளையும் பிராவோ இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து பந்தடித்த சென்னை அணிக்கு வழக்கம்போல இந்த முறையும் ருதுராஜ் கெய்க்வாட்டும் டு பிளஸ்ஸியும் சிறப்பான தொடக்கம் தந்தனர். ருதுராஜ் 45 ஓட்டங்களையும் டு பிளஸ்ஸி 41 ஓட்டங்களையும் எடுத்தனர்.
இருபதாவது ஓவரில் இமாலய சிக்சர் அடித்து, ஆட்டத்தை முடித்து வைத்தார் சென்னை அணித்தலைவர் மகேந்திர சிங் டோனி (14*). இதனையடுத்து, இரண்டு பந்துகள் எஞ்சிய நிலையில், இந்தப் பருவத்தில் சென்னை அணி தனது ஒன்பதாவது வெற்றியை ஈட்டியது.
இதுவரை ஐபிஎல் தொடரின் 12 பருவங்களில் பங்கேற்றுள்ள சென்னை அணி, அரையிறுதி/பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற்று இருப்பது இது 11வது முறை.