லண்டன்: 'பலோன் டு' வோர்' எனப்படும் உலகின் ஆகச் சிறந்த காற்பந்து விளையாட்டாளரைத் தேர்ந்தெடுக்க முன்மொழியப்பட்டுள்ள 30-பேர் பட்டியலில் தனது பெயர் இடம்பெற்றிருப்பது மறக்கமுடியாத ஒரு நிகழ்வென செல்சி அணியின் இளம் வீரர் மேசன் மவுன்ட் கூறியுள்ளார். 22 வயது மவுன்ட் கடந்த ஈராண்டுகளாகத்தான் செல்சியின் முதல்நிலை அணியில் இடம்பெற்று வருகிறார்.
அதற்குமுன் பெரும்பாலும் அணியின் இளம் வீரர்களுக்கான பிரிவுகளில் இடம்பெற்றார்.
இந்தக் காலகட்டத்தில் வெகு விரைவில் செல்சிக்கு சிறப்பாக ஆடியது மட்டுமின்றி இங்கிலாந்து நட்சத்திரமாகவும் அவதரித்தார். இப்போது 'பலோன் டு' வோர்' விருதுக்கும் முன்மொழியப்பட்டுள்ளார்.
"இத்தனை ஆண்டுகளாகக் கடினமாக உழைத்ததற்கும் முழுமையாக என்னை அர்ப்பணித்ததற்கும், இப்படி ஒரு நிகழ்வைப் பார்க்கும்போது அவை பலன் தந்துள்ளன எனத் தெரிகிறது. இது வெறும் ஆரம்பமே, இத்துடன் நின்றுவிடப் போவதில்லை," என்று மவுன்ட் பெருமையுடன் கூறினார்.