மட்ரிட்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் ஸ்பெயினின் அட்லெட்டிகோ மட்ரிட் குழுவை 3-2 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் போராடி வென்றது.
முதற்பாதியில் ஒரு கோலையும் பிற்பாதியில் வெற்றி கோலையும் போட்டு லிவர்பூலின் வெற்றிக்கு வித்திட்டார் நட்சத்திர வீரர் முகம்மது சாலா.
ஆட்டத்தின் 8வது நிமிடத்திலேயே சாலா போட்ட கோல் விளையாட்டரங்கத்தில் கூடியிருந்த அட்லெட்டிகோ ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.
இந்த அதிர்ச்சியிலிருந்து அவர்கள் மீள்வதற்குள் லிவர்பூல் அதன் இரண்டாவது கோலைப் போட்டது. 13வது நிமிடத்தில் நபி கேய்ட்டா அனுப்பிய பந்து மின்னல் வேகத்தில் வலைக்குள் சென்றது. இனி லிவர்பூலைத் தடுத்து நிறுத்த முடியாது என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டபோது அட்லெட்டிகோவின் அன்டொய்ன் கிரீஸ்மன் அடுத்தடுத்து இரண்டு கோல்களைப் போட்டு
ஆட்டத்தைச் சமன் செய்தார்.
பிற்பாதி ஆட்டம் முடிவதற்குள் மூன்றாவது கோலைப் போட்டு முன்னிலை வகிக்க வேண்டும் என்ற முனைப்புடன் அட்லெட்டிகோ தாக்குதலைத் தீவிரப்
படுத்தியது. ஆனால் விழிப்புடன் இருந்த லிவர்பூல் கோல்காப்பாளர் அதன் கோல் முயற்சிகளை முறியடித்தார்.
இடைவேளையின்போது இரு குழுக்களும் தரப்புக்கு இரண்டு கோல்களைப் போட்டு சமநிலையில் இருந்தன.
பிற்பாதி ஆட்டம் தொடங்கி சில நிமிடங்களிலேயே அட்லெட்டிகோ
குழுவுக்குப் பேரிடி விழுந்தது.
தப்பாட்டம் காரணமாக கிரீஸ்மனுக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டு ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
நட்சத்திர வீரரை இழந்தது மட்டுமல்லாது, மீதமுள்ள ஆட்டத்தை அட்லெட்டிலோ வெறும் பத்து ஆட்டக்
காரர்களுடன் தொடரும் நிலை ஏற்பட்டது. இது ஆட்டத்தின் போக்கை மாற்றியது. அட்லெட்டிகோவால் நினைத்தபடி தாக்குதலில் முழுவீச்சுடன் இறங்கமுடியாமல் போனது.
மாறாக, தற்காப்பில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் அதற்கு ஏற்
பட்டது. சமநிலை கண்டு குறைந்தது ஒரு புள்ளியையாவது எடுக்க அட்லெட்டிகோ போட்ட திட்டமும் நிறைவேறாமல் போனது.
பெனால்டி எல்லைக்குள் இருந்த லிவர்பூல் ஆட்டக்காரர் டியோகோ ஷோட்டா மீது அட்லெட்டிகோவின் தற்காப்பு ஆட்டக்காரர் மாரியோ ஹெர்மோசோ மோதி அவரைக் கீழே விழவைத்தார். இதன் காரணமாக கிடைத்த பெனால்டி வாய்ப்பை எடுத்த சாலா, லிவர்பூலின் மூன்றாவது கோலைப் போட்டார். ஆட்டம் முடிய ஏறத்தாழ பத்து நிமிடங்கள் இருந்தபோது பெனால்டி எல்லைக்குள் அட்லெட்டிகோவின் ஹோசே மரியா ஜிமெனேஸை லிவர்பூலின் ஷோட்டா கீழே தள்ளிவிட்டதாக முதலில் கருதிய நடுவர், அட்லெட்டிகோவுக்கு பெனால்டி வாய்ப்பை வழங்கினார்.
ஆனால் பிறகு காணொளி மூலம் சரிபார்த்த பிறகு, அந்த முடிவை
நடுவர் திரும்பப் பெற்றுக்கொண்டார்.
ஆட்டத்தை லிவர்பூல் கைப்பற்றியதும் லிவர்பூலின் நிர்வாகி யர்கன் கிளோப்புடன் கைகுலுக்காமல் அட்லெட்டிகோவின் நிர்வாகி டியேகோ சிமோனே தமது அணியின் ஓய்வு அறைக்குத் திரும்பி, அதிருப்தியை வெளிப்படுத்தினார்.