அபுதாபி: இந்திய அணிதான் டி20 கிண்ணத்தை வெல்லும் என ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கிண்ணத் தொடர் தகுதிச்சுற்று ஆட்டங்கள் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கி நடந்து வருகின்றன. அக்டோபர் 23ஆம் தேதி சூப்பர் 12 போட்டிகள் தொடங்குகின்றன.
இந்திய அணி தனது முதல் லீக் போட்டியாக வரும் அக்டோபர் 24ஆம் தேதியன்று பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
பயிற்சிப் போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளை இந்தியா வென்றது.
இந்தியா-ஆஸ்திரேலியா பயிற்சிப் போட்டி முடிந்ததும் பேசிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், "இந்திய அணியில் பந்து போடுதல், பந்து அடித்தல் இரண்டும் சரியாகப் பொருந்தி மிக பலமான அணியாகத் திகழ்கிறது. வெற்றி பெறக்கூடிய அனுபவமிக்க வீரர்கள் அதில் உள்ளனர். எனவே இந்த முறை இந்திய அணிதான் கிண்ணத்தை வெல்லும் என நினைக்கிறேன்," என்றார்.
என்றாலும் ஸ்டீவ் ஸ்மித் இப்படி கூறிவருவது அவரின் தந்திரம் என்றும் அவர் ஆசை காட்டி திசை திருப்புகிறார் என்றும் இந்திய ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
"இந்திய அணித்தலைவர் விராத் கோஹ்லிக்கு கொஞ்சம் உசுப்பேத்திவிட்டால் ஆர்வக் கோளாறால் அவர் சொதப்பி விடுவார். "அது தெரிந்து வேண்டுமென்றே விராத் கோஹ்லியின் அணிதான் உலகக் கிண்ணத்தை வெல்லும் என்று ஸ்டீவ் ஸ்மித் ஆசைகாட்டி திசை திருப்புகிறார்.
"இந்திய வீரர்கள் இதனைக் கண்டுகொள்ளாமல் ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும்," என ரசிகர்கள் கருத்து கூறி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.