சண்டிகர்: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பொருதிய உலகக் கிண்ண டி20 கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் காஷ்மீர் மாநில மாணவர்களுக்கும் பீகார், உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
சங்ரூரில் உள்ள பாய் குருதாஸ் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த அம்மாணவர்கள், தங்களது விடுதி அறைகளில் இருந்தபடி தொலைக்காட்சியில் போட்டியைப் பார்த்தனர்.
பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றபின் மாணவர்கள் சிலர், சில முழக்கங்களை எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அம்மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம் எழுந்தது.
இதற்கிடையே, போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது உத்தரப் பிரதேச மாநில மாணவர்கள் சிலர் தங்களது அறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து அறையைச் சேதப்படுத்தினர் என்றும் தாங்கள் இங்கு படிக்கவே வந்துள்ளோம் என்று காஷ்மீர் மாணவர் ஒருவர் கூறும் காணொளி சமூக ஊடகங்களில் வலம் வருகிறது. அதே வேளையில், அக்காணொளி உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
சம்பவம் குறித்து போலிஸ் விசாரித்து வருகிறது.

