துபாய்: உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் 13 ஆட்டங்களில் முதன்முறையாக பரம வைரியான இந்தியாவை வென்றுள்ளது பாகிஸ்தான், அதுவும் 10 விக்கெட் வித்தியாசத்தில். டி20 எனும் 20 ஓவர்கள் உள்ள ஆட்டத்தில் இந்தியா இதற்கு முன் 10 விக்கெட் இழப்புடன் தோல்வியுற்றதில்லை. அதே வித்தியாசத்தில் பாகிஸ்தான் இதற்கு முன் எந்த டி20 ஆட்டத்தை வென்றதும் இல்லை.
பாகிஸ்தானுக்கு மிகச் சிறப்பாக ஆடினார் அணித் தலைவர் பாபர் ஆசம். 52 பந்துகளில் 68 ஓட்டங்களை எடுத்த அசாம், 57 ஓட்டங்களை எடுத்த இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லியையும் மிஞ்சினார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தானின் அபார ஆட்டத்திற்கு இந்தியாவால் ஈடுகொடுக்கமுடியவில்லை. ஆட்டத்தை பாகிஸ்தான் வெல்லும் எனச் சிலர் எதிர்பார்த்திருந்தாலும் வெற்றி இவ்வளவு அபாரமாக இருந்திருக்கும் எனப் பலர் நினைத்திருக்கமாட்டார்கள்.
"ஆட்டங்கள் வர வர ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்துவோம், அதுவே நமக்குத் தன்னம்பிக்கையைத் தரும், இப்போட்டி முடிய இன்னும் பல நாட்கள் உள்ளன," என்றார் ஆசம்.
"நாங்கள் திட்டமிட்டபடி ஆட்டத்தை ஆடவில்லை ஆனால் பாராட்டவேண்டிய நேரத்தில் அதைச் செய்யவேண்டும். பாகிஸ்தான் எங்கள் அணியைவிட மிகச் சிறப்பாக ஆடியது," என்றார் கோஹ்லி.
போட்டி இப்போதுதான் தொடங்கியிருக்கிறது எனக் குறிப்பிட்ட அவர், இது முடிவல்ல என்றும் அமைதியாக இயங்குவது முக்கியம் என்றும் வலியுறுத்தினார்.
டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை இந்தியா, பாகிஸ்தான் இரண்டும் இதுவரை ஒரு முறை வென்றுள்ளன. 2007ஆம் ஆண்டில் முதன்முறையாக நடைபெற்ற டி20 போட்டியை வென்றது இந்தியா.