லண்டன்: இங்கிலீஷ் பிரிமியர் லீக்கில் பெரும் கண்டனத்திற்கு உள்ளான மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்து அணி மீண்டு வந்து டாட்டன்ஹம் ஹாட்ஸ்பர் அணியை வென்றது. சென்ற வாரம் லிவர்பூலிடம் 5-0 எனும் கோல் கணக்கில் உதை வாங்கிய யுனைடெட் இவ்வாட்டத்தை 3-0 எனும் கோல் கணக்கில் வென்றது. கிரிஸ்டியானோ ரொனால்டோ, எடின்சன் கவானி, மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட் ஆகியோர் கோல்களை அடித்தனர்.
யுனைடெட் நிர்வாகி ஒலே குனா ஷொல்சியாவிற்கு எந்நேரமும் வேலை போகக்கூடிய நிலை உருவெடுத்துள்ளது எனப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
இக்கட்டான சூழலைக் கருத்தில் கொண்டு அணியில் சில மாற்றங்களைச் செய்து இப்போதைக்கு நிலைமையைச் சீராக்கினார் ஷொல்சியா. அணிக்கு அனுபவம் சேர்க்க 36 வயதான ரொனால்டோ, 34 வயதான கவானி இருவரும் தொடக்கத்திலிருந்து ஆடினர். பொதுவாக இளம் வீரர்களை அதிகம் விரும்புபவர் ஷொல்சியா.
'ஃபார்மேஷன்' எனப்படும் விளையாட்டாளர்களை ஆட்டத்தில் அணிவகுக்கும் முறையையும் மாற்றினார். பலன்? இரண்டு மாதங்களாக இல்லாத நிலைத்தன்மையை அணியில் காணமுடிந்தது.
பல சிறந்த முன்னிலை விளையாட்டாளர்கள் இருக்கும்போது இதேபோல் என்றும் ஆடமுடியாமல் போகலாம். ஆனால் சரிவை நிறுத்தத் தேவையான உத்தி இது.
"இந்நேரத்தில் ரொனால்டோ, கவானி இருவரின் அனுபவமும் மிக முக்கியமானது," எனக் கூறிய ஷொல்சியா, "இது நமக்குத் தேவை, மறைக்கமுடியாது. அணியின் விளையாட்டாளர்கள் எல்லோருக்கும் இது சவாலான வாரமாக இருந்தது. அவர்கள் அதை மனவுறுதியுடன் அணுகினர். இத்தகைய சூழலில் அனுபவம் கைகொடுக்கும்," எனக் குறிப்பிட்டார்.
எனினும், இந்த வெற்றி, லிவர்பூலிடம் படுதோல்வி அடைந்ததால் ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்காது என்பதையும் அவர் சுட்டினார். யுயேஃபா சாம்பியன்ஸ் லீக்கில் நாளை இத்தாலியின் அட்டலான்டா அணியையும் லீக்கில் இவ்வாரயிறுதியில் நடப்பு வெற்றியாளர் அணியான மான்செஸ்டர் சிட்டியையும் வென்றால்தான் ஷொல்சியாவால் தனது வேலையைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் எனப் பல ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சென்ற வாரம் யுனைடெட்டை மண்ணைக் கவ்வ வைத்த லிவர்பூல், பிரைட்டனுக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு கோல் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தும் வெல்லத் தவறியது. அவ்வாட்டம் 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

