லிவர்பூல்: தொடர்ந்து பத்து ஆட்டங்களாக நீடித்த ஆர்சனல் காற்பந்துக் குழுவின் தோற்காப் பயணம் லிவர்பூல் குழுவின் ஆன்ஃபீல்ட் அரங்கில் முடிவிற்கு வந்தது.
நேற்று முன்தினம் பின்னிரவு நடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் லிவர்பூல் 4-0 என்ற கோல் கணக்கில் ஆர்சனலுக்குத் தோல்வியைப் பரிசளித்தது. சொந்த அரங்கில் ஆர்சனலுக்கு எதிராக லிவர்பூலுக்குத் தொடர்ச்சியாகக் கிடைத்த ஆறாவது வெற்றி இது.
ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் டிரென்ட் அலெக்சாண்டர் ஆர்னல்டிடம் இருந்து துல்லியமான 'ஃபிரீ கிக்' மூலம் வந்த பந்தைத் தலையால் முட்டி வலைக்குள் தள்ளி, லிவர்பூலுக்கு முதல் கோலைப் பெற்றுத் தந்தார் சாடியோ மானே.
ஆர்சனல் கோல்காப்பாளர் ஏரன் ராம்ஸ்டேல் தமது அருமையான செயல்பாட்டின்மூலம் லிவர்பூல் குழுவின் பல கோல் முயற்சிகளை முறியடித்தார். ஆனாலும், 52வது நிமிடத்தில் அவரது தடுப்பை மீறிச் சென்று கோலடித்தார் லிவர்பூலின் போர்ச்சுகல் ஆட்டக்காரர் டியோகோ ஜோட்டா.
அதன்பின் நட்சத்திர வீரர் முகம்மது சாலா 73வது நிமிடத்திலும் மாற்று வீரராக வந்த டக்குமி மினாமினோ 77வது நிமிடத்திலும் கோல் அடித்து, லிவர்பூலின் வெற்றியை உறுதிப்படுத்தினர்.
இவ்வெற்றியால் லிவர்பூல் குழு 25 புள்ளிகளுடன் பட்டியலின் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது (நேற்றைய மான்செஸ்டர் சிட்டி - எவர்ட்டன் ஆட்டத்திற்கு முந்திய நிலவரம்).
போட்டியின்போது எல்லைக்கோட்டருகே சொற்போரில் ஈடுபட்டதால் ஆர்சனல் நிர்வாகி மிக்கெல் அர்ட்டேட்டாவும் லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப்பும் மஞ்சள் அட்டை காட்டி எச்சரிக்கப்பட்டனர்.
முன்னதாக நடந்த ஆட்டத்தில், ஆஸ்டன் வில்லா குழு 2-0 என்ற கோல் கணக்கில் பிரைட்டன் குழுவை மண்கவ்வச் செய்தது. இந்த வெற்றியால் தாம் நிம்மதியாக உணர்வதாகக் குறிப்பிட்டார் வில்லா குழுவின் புதிய நிர்வாகி ஸ்டீவன் ஜெரார்ட்.

