ஐபிஎல்: சென்னை அணி தக்கவைக்கும் நால்வர்!

ஐபிஎல்: சென்னை அணி தக்கவைக்கும் நால்வர்!

2 mins read
0be763af-1142-4d19-837f-22d56575bf5f
இவ்வாண்டு நடந்த ஐபிஎல் தொடரில்கிண்ணம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. படம்: பிசிசிஐ -

அகமதாபாத், லக்னோ என மேலும் இரு புதிய அணிகள் இணைய, மொத்தம் பத்து அணிகளுடன் அடுத்த பருவ ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது.

2022 ஏப்ரல் 2ஆம் தேதி சென்னையில் 15வது ஐபிஎல் தொடர் தொடங்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையொட்டி, வீரர்களுக்கான மாபெரும் ஏல நிகழ்ச்சி அடுத்த மாதம் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், ஒவ்வோர் அணியும் கடந்த பருவத்தில் விளையாடிய வீரர்களில் நால்வரைத் தக்கவைத்துக்கொள்ளலாம்.

அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அணித்தலைவரான மகேந்திர சிங் டோனியை அடுத்த மூன்று பருவங்களுக்குத் தக்கவைத்துக்கொள்ளும் எனத் தெரிகிறது.

அவருடன், ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரையும் அவ்வணி தக்கவைத்துக்கொள்ள இருப்பதாக 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி தெரிவிக்கிறது.

நான்காவது வீரராக, இங்கிலாந்து வீரர் மொயின் அலி சென்னை அணியில் நீடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவர் ஒத்துக்கொள்ளாவிடில், இன்னோர் இங்கிலாந்து அணி வீரரான சாம் கரன் சென்னை அணியில் தக்கவைக்கப்படலாம்.

'சின்ன தல' என ரசிகர்களால் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, ஓட்டம் குவிக்கத் தடுமாறுவதால் முதன்முறையாக அணியைவிட்டு ஓரங்கட்டப்படுகிறார். ஏலத்தின்மூலம் அவர் சென்னை அணிக்குத் திரும்பவும் வாய்ப்புள்ளது.

இம்மாதம் 30ஆம் தேதிக்குள் தாங்கள் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்களின் பட்டியலை அணிகள் சமர்ப்பிக்க வேண்டும்.

மற்ற அணிகளைப் பொறுத்தமட்டில், அணித்தலைவர் ரிஷப் பன்ட், தொடக்க வீரர் பிருத்வி ஷா, ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல், வேகப் பந்துவீச்சாளர் ஆண்ரிக் நோர்க்கியா ஆகியோரை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தக்கவைத்துக்கொள்ள இருக்கிறது.

முக்கிய வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் அவ்வணியைவிட்டு விலகக்கூடும் எனப் பேச்சு அடிபடுகிறது. அணித்தலைமைப் பொறுப்பை ஏற்க அவர் விரும்புவதாகவும் ஆனால் அப்பதவியை ரிஷப் பன்டிடம் இருந்து திரும்பப் பெற டெல்லி அணி தயங்குவதாகவும் சொல்லப்படுகிறது.

மும்பை அணி, ரோகித் சர்மா, ஜஸ்பிரீத் பும்ரா ஆகிய இருவரையும் தக்கவைக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் கைரன் பொல்லார்டுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நான்காவது வீரராக சூர்யகுமார் யாதவ் அல்லது இஷான் கிஷன் தக்கவைக்கப்படலாம்.

இதனிடையே, பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து கே.எல்.ராகுல் வெளியேறிவிட்டதாகவும் அவர் லக்னோ அணியில் சேர இணங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் வீரர்களான சுனில் நரைனையும் ஆண்ட்ரே ரசலையும் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தக்கவைக்கும் எனத் தெரிகிறது. தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியையும் அது விட்டுவிட விரும்பவில்லை. நான்காவது வீரராக, ஷுப்மன் கில் அல்லது வெங்கடேஷ் ஐயர் தக்கவைக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்