கோலாலம்பூர்: தனது நாட்டில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள முக்கியமான சுவர்ப்பந்துப் போட்டியில் பங்கேற்க மலேசியா, இஸ்ரேலிய விளையாட்டாளர்களுக்கு விசா வழங்க மறுப்பதாக உலக சுவர்ப்பந்துச் சம்மேளனம் தெரிவித்துள்ளது. சமயம் சார்ந்த காரணங்களுக்காக மலேசியா இவ்வாறு செய்வதாகக் கருதப்படுகிறது. சுவர்ப்பந்துப் போட்டி அடுத்த மாதம் ஏழாம் தேதியிலிருந்து 12ஆம் தேதிவரை நடைபெறும்.
மலேசியா ஏற்கெனவே இஸ்ரேலிய விளையாட்டாளர்களைத் தனது நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்திருக்கிறது. 2019ஆம் ஆண்டில் சிறப்புத் தேவையுடையோருக்கான நீச்சல் போட்டியில் இஸ்ரேலிய வீரர்களை அனுமதிக்கப்போவதில்லை என்று மலேசியா மிரட்டியது. அதைத் தொடர்ந்து அப்போட்டியை ஏற்று நடத்தும் பொறுப்பு அதனிடமிருந்து பறிக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டில் இஸ்ரேலின் 'விண்ட்சர்ஃபிங்' எனப்படும் அலையாடல் வீரர்களுக்கு மலேசியா விசா வழங்க மறுத்தது. அதனால் லங்காவியில் நடைபெற்ற போட்டியிலிருந்து இஸ்ரேலிய வீரர்கள் விலக நேரிட்டது.