மான்செஸ்டர்: மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் இடைக்கால நிர்வாகியாக ரால்ஃப் ரானிக் நியமிக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெர்மனியைச் சேர்ந்த 63 வயது ரானிக் அந்நாட்டில் ஆர்பி லெய்ப்ஸிக் குழுவின் எழுச்சிக்குக் காரணமானவர்.
அதுமட்டுமல்லாது, நவீன ஜெர்மன் காற்பந்தின் முன்னோடியாகவும் அவர் கருதப்படுகிறார்.
அண்மையில் யுனைடெட்டின் நிர்வாகிப் பதவியிலிருந்து ஒலே குனார் சோல்சியா நீக்கப்பட்டார்.
வார்ட்ஃபர்ட் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் யுனைடெட் 4-1 எனும் கோல் கணக்கில் படுதோல்வி அடைந்ததை அடுத்து சோல்சியா பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஜெர்மன் காற்பந்து உலகில் ஆர்பி லெய்ப்ஸிக், ரெட் புல் சால்ஸ்பர்க் ஆகிய குழுக்கள் புகழ்பெற காரணமான ரானிக்கை ஒப்பந்தம் செய்ய யுனைடெட் விரும்புவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாரிஸ் செயிண்ட் ஜெமேன் குழுவின் நிர்வாகியாக இருக்கும் மொரிசியோ பொக்கெட்டினோ அல்லது ஆயக்ஸ் ஆம்ஸ்டர்டாம் குழுவின் நிர்வாகியான எரிக் டென் ஹேக் யுனைடெட்டின் அடுத்த முழுநேர நிர்வாகியாக நியமிக்கப்படக்கூடும் என்று பேசப்படுகிறது.
இருப்பினும், உடனடியாக யுனைடெட்டை மீண்டும் வெற்றியின் பாதைக்குக் கொண்டு செல்ல இடைக்கால நிர்வாகி தேவைப்
படுகிறது.
எனவே ரானிக்கிற்கு அந்தப் பொறுப்பு வழங்கப்படக்கூடும்.
யாரும் அறிந்திடாத ஹோஃபன்ஹைம் குழுவை ஜெர்மன் காற்பந்து லீக் வரை கொண்டு சென்ற பெருமை ரானிக்கைச் சேரும்.
தீவிரமான, மிக வேகமான விளையாட்டு அணுகுமுறையை கையாள்பவர் ரானிக்.
யுனைடெட்டின் இடைக்கால நிர்வாகியாக ரானிக் நியமிக்கப்பட்டால் இப்பருவம் முடியும் வரை அவர் அதில் நீடிப்பார் என்று கூறப்படுகிறது.
புதிய நிர்வாகி தேர்ந்தெடுக்கப்பட்டதும் மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் ஆலோசகராக அவர் பொறுப்பேற்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.