லண்டன்: பிரிமியர் லீக் தரவரிசையில் அடி மட்டத்தில் இருக்கும் நியூகாசல் குழுவுக்கு பிரச்சினைகள் ஓய்ந்தபாடில்லை. நேற்று முன்தினம் ஆர்சனல் அணியுடன் மோதிய நியூகாசல் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது.
ஆர்சனல் அணியின் சார்பாக புக்காயோ சாக்கா, கேப்பிரியல் மார்டினேலி இருவரும் போட்ட கோல்களே அதற்கு வெற்றி தேடித் தர போதுமானதாக விளங்கின.
நியூகாசலுக்கு புதிய நிர்வாகியாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள எடி ஹாவ் அண்மையில் கொவிட்-19 கிருமியால் பாதிக்கப்ட்ட நிலையில் சென்ற வாரம் பிரண்ட்ஃபர்ட் குழுவுடன் மோதி 3-3 என சமநிலை கண்டபோது அவரால் திடலுக்கு வரமுடியாக நிலை.
நேற்று முன்தினம் அந்தக் குறை நீங்கிட அவரும் ஆர்சனலுடனான ஆட்டத்தில் திடலுக்கு நேரடியாக வந்து பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால், அவருக்கு மிஞ்சியது ஏமாற்றமே. லிவர்பூலிடம் சென்ற வாரம் தோல்வி கண்ட ஆர்சனல் முதல் பாதியில் கோல் போட முடியாமல் திணறியது.
எனினும், கவனம் சிதறாமல் பொறுமையுடன் விளையாடிய ஆர்சனல் 56வது நிமிடத்தில் சாக்கா கோல் போட்டு நிம்மதி அளித்தார். பின்னர் மார்டினேலி இரண்டாவது கோல் போட நியூகாசலால் எழ முடியவில்லை.
முதல் பாதி ஆட்டத்தில் நியூகாசலின் ஜோன்ஜோ ஷெல்வி ஆர்சனல் கோல் வலையை நோக்கி உதைத்த பந்து கோல் கம்பத்தை தொட்டுச் சென்றது. பின்னர், ஆர்சனல் கோல் போட்டதும் நியூகாசலின் முனைப்பு குறைந்தது.
இது குறித்து கருத்துரைத்த ஹாவ், "நான் நம்பிகை இழக்கா தவன். இந்த இரண்டு ஆட்டங்களில் கண்டதை வைத்து, நியூகாசல் குழுவால் பிரிமியர் லீக் போட்டிகளில் தாக்குப் பிடிக்க முடியும் என்று சொல்ல முடியும்," என சளைக்காமல் கூறினார்.