பாரிஸ்: வரலாறு காணாத வகையில் ஏழாவது முறையாக 'பலோன் டு' வோர்' எனப்படும் உலகின் தலைசிறந்த காற்பந்து வீரரைக் கௌரவிக்கும் விருதை வென்றுள்ளார் பிரான்சின் பிஎஸ்ஜி அணியைச் சேர்ந்த லயனல் மெஸ்ஸி. நீண்டகாலமாக ஸ்பெயினின் பார்சிலோனா அணிக்கு விளையாடிய 34 வயது மெஸ்ஸி, அர்ஜென்டினா தேசிய அணியின் தலைவரும் ஆவார். இவரின் தலைமையில் லத்தீன் அமெரிக்க தேசிய அணிகள் பங்கேற்கும் கோப்பா அமெரிக்கா போட்டியை அர்ஜென்டினா சில மாதங்களுக்கு முன் வென்றது.
"மறுபடியும் இதனைச் செய்துள்ளது (பலோன் டு' வோர் விருதை வென்றது) அற்புதமான ஒன்று. ஈராண்டுகளுக்கு முன்பு வென்றதே கடைசி முறையாக இருக்கும் என்று நான் நினைத்தேன்," என்றார் மெஸ்ஸி. "கோப்பா அமெரிக்கா கிண்ணத்தை அர்ஜென்டினா வென்றதால் இது எனது நினைவில் நிற்கும் ஆண்டாக அமைந்துள்ளது. மராக்கானா விளையாட்டரங்கில் கோப்பா கிண்ணத்தை வென்றது மறக்கமுடியாத ஒரு நிகழ்வாக அமைந்ததுடன் அர்ஜென்டினா மக்களுடன் கொண்டாட முடிந்தது மகிழ்ச்சியாக இருந்தது," என்றும் இவர் குறிப்பிட்டார்.
அர்ஜென்டினாவுக்குக் கிண்ணம் வென்று தரவில்லை என்று மெஸ்ஸி மீதிருந்த சில தரப்பினரின் குற்றச்சாட்டையும் கோப்பா வெற்றி அகற்றியது. பார்சிலோனா அணிக்கு விளையாடியபோது சில பருவங்களில் சுமார் 60 கோல்களைப் போட்டு காற்பந்து உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர் மெஸ்ஸி. இவருக்கு அடுத்தபடியாக 'பலோன் டு' வோர்' விருதை ஆக அதிக முறை வென்றுள்ளார் இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட்டிற்கு ஆடும் போர்ச்சுகீசிய நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
ஜெர்மனியின் பயர்ன் மியூனிக் அணிக்கு ஆடும் ராபர்ட் லெவண்டொவ்ஸ்கி, சென்ற ஆண்டுக்கான விருதை வெல்வார் எனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கொவிட்-19 கிருமிப் பரவல் சூழல் காரணமாக விருது நிகழ்ச்சி ரத்துசெய்யப்பட்டது. அதிக காற்பந்து ஆட்டங்கள் இடம்பெறாததால் விருதுகள் வழங்கப்படவில்லை. இவ்வாண்டும் லெவண்டொவ்ஸ்கி விருதுக்கு முன்மொழியப்பட்டார். "அவருடன் போட்டியிடுவது எனக்குக் கிடைத்த பெருமை என்று ராபர்ட்டிடம் லெவண்டொவ்ஸ்கியிடம் கூற நினைத்தேன்," என்று சொன்ன மெஸ்ஸி, "சென்ற ஆண்டு விருதை வெல்ல அவருக்கு எல்லாத் தகுதிகளும் இருந்தன," எனப் பாராட்டினார்.
தற்போது பிஎஸ்ஜியில் சற்று சிரமப்படும் மெஸ்ஸிக்கு இவ்விருது ஊக்கமாக அமையலாம்.

