லிவர்பூல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் தொடர்ந்து மூன்றாவது ஆட்டத்தில் நான்கு கோல்களைப் போட்டுள்ளது லிவர்பூல் காற்பந்து அணி. பிரிமியர் லீக்கில் இதுவரை லிவர்பூல் 43 கோல்களைப் போட்டிருக்கிறது. லீக்கில் இவ்வணியே ஆக அதிக கோல்களைப் போட்டுள்ளது. மேலும், காற்பந்து உலகில் ஐரோப்பாவின் ஆகப் பெரியதாகக் கருதப்படும் ஐந்து நாடுகளைச் சேர்ந்த லீக்குகள் எதிலும் ஜெர்மனியின் பயர்ன் மியூனிக் உட்பட வேறு எந்த அணியும் இத்தனை கோல்களைப் போடவில்லை. பிரிமியர் லீக்கில் லிவர்பூலுக்கு அடுத்தபடியாக ஆக அதிக கோல்களைப் போட்டிருக்கும் செல்சிக்குக்கூட இதனைவிட 10 கோல்கள் குறைவு. தனது பரம வைரியான எவர்ட்டனை 4-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்திய லிவர்பூலுக்கு இரண்டு கோல்களைப் போட்டார் மோ சாலா. கடந்த சுமார் ஓராண்டாக மான்செஸ்டர் சிட்டியின் கெவின் டி பிரோய்ன, டோட்டன்ஹம் ஹாட்ஸ்பரின் ஹேரி கேன் ஆகியோரிடம் சென்ற ரசிகர்களின் கவனம் இப்பருவத்தில் மீண்டும் சாலா பக்கம் திரும்புகிறது. குழுவாக மிகவும் அபாரமாக ஆடிவரும் லிவர்பூலுக்கு மேலும் விறுவிறுப்பைத் தருகிறது சாலாவின் சாகசம்.
"நாம் இதுவரை சில ஆட்டங்களில் சிறப்பாக விளையாடியிருக்கிறோம் ஆனால், இதில் ஆடிய அளவுக்கு இல்லை; இன்று இருந்த அளவு நிதானமாக விளையாடியதில்லை, இவ்வளவு அபாரமாக ஆடியதில்லை. அதனால்தான் இவ்வாட்டத்தை வென்றோம், அதை நினைத்து நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்," என்றார் லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளாப். "நான் லிவர்பூலில் சேர்ந்த பிறகு குடிசன் பார்க் (எவர்ட்டனின் சொந்தத் திடல்) அரங்கில் விளையாடியதில் இதுவே ஆகச் சிறப்பானது," என்றும் கிளாப் குறிப்பிட்டார்.
லீக் பட்டியலில் தற்போது மூன்றாம் இடத்தை வகித்தாலும் லிவர்பூல் எந்நேரமும் முதலிடத்தைப் பிடிக்கக்கூடும் என்ற உணர்வு எழுகிறது. எனினும், அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஆப்பிரிக்க தேசிய அணிகளுக்கான 'ஆப்பிரிக்கன் நேஷன்ஸ்' கிண்ணப் போட்டியில் லிவர்பூலின் செனகல் வீரர் சாடியோ மானே, எகிப்தின் சாலா இருவரும் தங்களின் தேசிய அணிகளைப் பிரதிநிதித்து ஆடுவர். அப்போது இவ்விருவரும் இல்லாமல் ஆட்டங்களை வெல்லும் சவாலை லிவர்பூல் எதிர்நோக்கும்.
இப்பருவத்தின் தொடக்கத்தில் சிறப்பாக ஆடிய எவர்ட்டன், கடந்த எட்டு லீக் ஆட்டங்களில் வெல்லவில்லை. இதனால் எவர்ட்டனைத் தற்போது வழிநடத்தும் முன்னாள் லிவர்பூல் நிர்வாகி ராஃபா பெனிட்டெஸ் நெருக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார். எனினும், பெனிடெஸுக்கு முன்னால் இருந்த நிர்வாகிகளாலும் இவ்வணியைச் சிறப்பாக விளையாட வைக்க முடியவில்லை. கடைசியாக டேவிட் மோயெஸ்தான் சிறப்பாகச் செய்தார்.

