மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஓட்ட எண்ணிக்கை அடிப்படையில் இந்திய அணிக்குக் கிட்டிய ஆகப் பெரிய வெற்றி இது.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிந்தது.
இந்நிலையில், இரண்டாவது போட்டி கடந்த 3ஆம் தேதி மும்பையில் தொடங்கியது.
முதலில் பந்தடித்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 325 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 150 ஓட்டங்களைக் குவித்தார். இந்தியாவில் பிறந்து, இப்போது நியூசிலாந்து அணிக்காக விளையாடி வரும் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல் பத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றி சாதனை படைத்தார்.
ஆனாலும், அவரது இந்த அரிய சாதனை நியூசிலாந்து அணிக்குச் சாதகமாக அமையவில்லை. இந்திய அணியினரின் பந்துவீச்சில் திணறிய அவ்வணி முதல் இன்னிங்சில் 62 ஓட்டங்களுக்குச் சுருண்டது.
தொடர்ந்து 2வது இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 276 ஓட்டங்களை எடுத்த நிலையில் பந்தடிப்பை முடித்துக்கொள்வதாக அறிவித்தது. இம்முறையும் அதிகபட்சமாக அகர்வால் 62 ஓட்டங்களைச் சேர்த்தார்.
அதனைத் தொடர்ந்து, 540 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் 2வது இன்னிங்சைத் தொடங்கிய நியூசிலாந்து அணி மூன்றாம் நாள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 140 ஓட்டங்களை எடுத்து இருந்தது.
நேற்று நான்காம் மேலும் 27 ஓட்டங்களை மட்டும் சேர்த்து, எஞ்சிய ஐந்து விக்கெட்டுகளையும் இழந்து, படுமோசமாகத் தோற்றது நியூசிலாந்து. ஓட்ட எண்ணிக்கை அடிப்படையில் இதுவே அவ்வணியின் ஆகப் பெரிய தோல்வி.
அகர்வால் ஆட்ட நாயகனாகவும் இரு போட்டிகளிலும் சேர்த்து 14 விக்கெட்டுகளைச் சாய்த்த அஸ்வின் தொடர் நாயகனாகவும் தேர்வு பெற்றனர்.
நியூசிலாந்து அணி கடைசியாக 1988ஆம் ஆண்டில் மும்பை வான்கடே அரங்கில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இருந்தது.
அதன்பின், இந்தியாவில் 12 இருதரப்பு டெஸ்ட் தொடர்களில் பங்கேற்றுள்ளபோதும் அவ்வணியால் ஒருமுறைகூட வெற்றிக் கோட்டைத் தொட முடியவில்லை.
50, 50, 50 - 'முதல்வன்' கோஹ்லி
இவ்வெற்றியை அடுத்து, 50 டெஸ்ட் போட்டிகள், 50 ஒருநாள் போட்டிகள், 50 டி20 போட்டிகளில் வெற்றிபெற்ற அணியில் இடம்பிடித்த முதல் ஆட்டக்காரர் என்ற சாதனையைப் படைத்தார் விராத் கோஹ்லி.
அதுபோல, 4வது முறையாக ஒரே ஆண்டில் 50 விக்கெட்டுகளுக்குமேல் வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார் அஸ்வின். கும்ளே, ஹர்பஜன் ஆகியோர் மும்முறை இச்சாதனையை நிகழ்த்தியுள்ளனர். அத்துடன், சொந்த மண்ணில் 300 விக்கெட்டுகளுக்குமேல் வீழ்த்திய 6வது வீரர் என்ற பெருமையும் அஸ்வினைச் சென்றடைந்தது.
அத்துடன், இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகளில் ஆக அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர் என்ற சாதனையை சர் ரிச்சர்ட் ஹாட்லியிடம் இருந்து தட்டிப் பறித்தார் அஸ்வின். ஹாட்லி 65 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த நிலையில், அஸ்வின் இப்போது அவரைவிட ஒரு விக்கெட் கூடுதலாக வீழ்த்தியுள்ளார்.
தரவரிசையில் இந்தியா மீண்டும் முதலிடம்
நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றதை அடுத்து, டெஸ்ட் போட்டிகளுக்கான அனைத்துலக கிரிக்கெட் மன்றத்தின் தரவரிசையில் இந்திய அணி மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து அணி இரண்டாமிடத்திற்கு இறங்கியது. இந்திய அணி 124 புள்ளிகளையும் நியூசிலாந்து அணி அதைவிட மூன்று புள்ளிகள் குறைவாகவும் பெற்றுள்ளன. சொந்த மண்ணில் கடைசியாக விளையாடிய 14 டெஸ்ட் தொடர்களிலும் இந்தியா வென்றுள்ளது. அதில் 11 தொடர்களில் விராத் கோஹ்லி தலைமையில் இந்திய அணி விளையாடியது குறிப்பிடத்தக்கது. 2013ல் இங்கிலாந்து அணியிடம் 2-1 என்ற கணக்கில் தோற்றதே தாய்நாட்டில் இந்திய அணிக்குக் கிட்டிய கடைசி தோல்வி.