போர்ட்டோ: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் முதல் சுற்றிலேயே வெளியேற்றப்படும் விளிம்பில் இருந்த ஸ்பெயினின் அட்லெட்டிக்கோ மட்ரிட், போர்ச்சுகலின் போர்ட்டோ அணியை வென்று தனது தலையெழுத்தை மாற்றிக்கொண்டுள்ளது. 'பி' பிரிவில் ஏசி மிலானும் தோல்வியடைந்தது அட்லெட்டிக்கோவிற்குச் சாதகமாக அமைந்தது.
போர்ட்டோவை 3-1 எனும் கோல் கணக்கில் வென்றது அட்லெட்டிக்கோ. தப்பாட்டம் காரணமாக அட்லெட்டிக்கோவின் யானிக் கராஸ்கோவும் போர்ட்டோவின் வெண்டல், அகஸ்டின் மார்க்கெசின் ஆகியோரும் ஆட்டத்திலிருந்து நீக்கப்பட்டனர். காரசாரமான ஆட்டத்தில் கவனத்துடன் ஆடி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியது அட்லெட்டிக்கோ.
"எனது விளையாட்டாளர்களை எண்ணி நான் பெருமைப்படுகிறேன்," என்று சொன்ன அட்லெட்டிக்கோ பயிற்றுவிப்பாளர் டியேகோ சிமியோனே, "அவர்கள் மீண்டுவரும் ஆற்றலைக் காட்டினர், எதிர்கொண்ட சவால்களை வைத்துப் பார்க்கும்போது போராட்டத்தைக் கையாளும் அவர்களின் திறனும் தெரிகிறது," என்றும் கூறினார். எனினும், இப்பிரிவில் தனது அணி இன்னும் சிறப்பாக விளையாடியிருக்கவேண்டும் என்பதையும் சிமியோனே ஒப்புக்கொண்டார். "நமக்குக் கிடைத்தது போட்டியில் ஆகச் சவாலான பிரிவுகளில் ஒன்று. இதில் எல்லா அணிகளுக்கு எதிரான ஆட்டங்களிலிருந்தும் சில புள்ளிகளைப் பெறுவோம் என்று எதிர்பார்த்தேன், ஆனால் லிவர்பூலுக்கு எதிராக அது நடக்கவில்லை. மிலானையும் போர்ட்டோவையும்விட கூடுதல் புள்ளிகளைப் பெற்றோம். நாங்கள் எங்களை மேம்படுத்திக்கொள்ளவேண்டும், அதை இவ்வாறே செய்யவேண்டும்," என்றார் சிமியோனே.
கடந்த சில ஆண்டுகளாக நடுநிலை ரசிகர்களையும் அட்லெட்டிக்கோ கவர்ந்துவருகிறது. இவ்வணியிடமிருந்து வரும் கடும் போட்டியை எதிர்கொள்கிறது இதன் பரம வைரியான ரியால் மட்ரிட்.

